
posted 1st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
குழந்தை பெற்ற இளம் தாய் குருதிப்பெருக்கால் மரணம்
குழந்தை பெற்ற 27 வயதி நிரம்பிய மரியராஜ் சிந்துஜா எனும் இளம் தாய் ஒருவர் தனது முதல் குழந்தையை மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க் கிழமையன்று பெற்றெடுத்தார்.
சுகமாகப் பிரசவித்த குழந்தையுடன் 11ஆம் திகதி நலமுடன் வைத்தியசாலையிலிருந்து வீடு சென்றார்.
பிரசவத்தில் போடப்பட்ட தையலை 7 நாட்களின் பின்னர் வெட்டுவதற்காக கடந்த 16ஆம் திகதி முருங்கன் மருத்துவ மனையில் அத் தையல்கள் வெட்டப்பட்டன என்று இறந்தவரின் தாயார் தெரிவித்தார்.
இதன் பின்பு கடந்த சனிக்கிழமை (27) சிந்துஜா குருதிப் பெருக்கு ஏற்பட்டதினால் மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குருதிப் பெருக்கினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை (28) காலையில் அவர் மயக்கமடைந்தார். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் முற்பகல் 11 மணியளவில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
சிந்துஜா உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் கவலையீனமே காரணம் என்றும், இத்தவறு நடைபெற்றிருக்காவிட்டால் என் மகளும் இப்போது உயிருடன் இருந்திருப்பாள் என்று சிந்துஜாவின் தாயார் கண்ணீர் மல்கக் கூறினார்.
இது தொடர்பில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வினவிய போது,
பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட மருத்துவ அதிகாரியின் பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் 29ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது என்றும், அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறிய அவர், மேலதிக பரிசோதனைகளுக்காக காலம் சென்ற சிந்துஜாவின் உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்துக்கான சரியான காரணத்தை முழுமையாக அறிய முடியும் என்றும், அவற்றிலிருந்து இவரின் மரணத்திற்கு மருத்துவமனை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)