வன்முறை, தீவிரவாதம்  இல்லாதொழிக்க விழிப்புணர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நாட்டில் இன்றைய காலக்கட்டத்தில் வன்முறை, தீவிரவாதம் மலிந்து வரும் இவ்வேளையில் இவற்றை இல்லாதொழிப்பதற்காகவும், நாட்டில் உள்ள சிவில் அமைப்புககின் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்குடன் தேசிய சமாதான பேரவை மற்றும் பிரதேச தொடர்பாடல் பயிற்சி நிலைய உறுப்பினர்கள் ஒன்றினைந்து பல வேலைத் திட்டங்களை நீண்ட காலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய பல இன, சமய மக்கள் வாழும் மன்னார் மாவட்டத்தில் வன்முறை தீவிரவாதம் தலை தூக்கக் கூடாது என்ற தூரநோக்கு சிந்தனையில் பல திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் ஒன்றாக தற்பொழுது தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் பிரதேச தொடர்பாடல் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் இதன் திட்ட இணைப்பாளர் ஜசோதரன் தலைமையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வீதி நாடகங்கள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் மத்தியில் காணப்படுகின்ற முரண்பாடுகள் தனி நபர்களால் உருவாகும் சண்டை சச்சரவுகள் குழு சண்டைகளாக மாறி அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்ட நாடகமானது அரங்கலய நாடகக் குழுவினால் காண்பிக்கப்பட்டது.

இவ் வீதி நாடகங்கள் கடந்த இரு தினங்களாக அதாவது ஞாயிறு, திங்கள் (07 , 08.08.2022) ஆகிய தினங்கள் மன்னார் நகர் பகுதியில் பள்ளிமுனை , உப்புக்குளம் , மன்னார் பிரதேச செயலக வளாகப் பகுதிகளிலும் இடம்பெற்றன.

இந் நிகழ்வுகளில் பொது மக்கள் பலர் உட்பட மன்னார் சர்வமத குழுவினர், சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொலிசார் என பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இவ் நாடகத்தின் இறுதியில் இங்கு கலந்து கொண்ட யாவரும் வன்முறை தீவிரவாதத்திற்கோ அல்லது குழு மோதல்களுக்கோ ஆதரவளிக்க மாட்டோம் என சத்திய பிரமானம் மேற்கொண்ட நிகழ்வும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறை, தீவிரவாதம்  இல்லாதொழிக்க விழிப்புணர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)