
posted 17th May 2022
வல்வெட்டித்துறை மண்ணை விழுந்து வணங்கி ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் பேரணி
பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள அவரது பிறந்த வீட்டுக்கு முன்னால் விழுந்து வணங்கி திங்கட்கிழமை (16) முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
மே 18ல் முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் கறைபடிந்த நாளான முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் கடந்த 12ஆம் திகதி உணர்வு பூர்வமாக தமிழர் தாயகப் பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது நடைபவனியாக பருத்தித்துறை, நெல்லியடி, அச்சுவேலி, நல்லூர் கந்தசாமி ஆலயம், யாழ் பல்கலைக்கழகம் ஊடாக யாழ் நகரத்தை வந்தடையவுள்ளது.
பின்னர் யாழ் நகரத்திலிருந்து நாவற்குழி கைதடி சாவகச்சேரி கொடிகாமம் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து, அங்கிருந்து மே 18 திகதி புதன் கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை சென்றடைய உள்ளது.
இனப் படுகொலை சித்திரங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வராத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நேற்று முன்தினம் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இனப்படுகொலையை நினைவுறுத்தும் சித்திரங்களும் காட்சிபடுத்தப்பட்ட நிலையில், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக காய்ச்சப்பட்டது.
பல்கலைக்கழக நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச் சுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியால் நினைவுப்பகிர்வு முன்னெடுக்கப்பட்டு பல்கலைக்கழக வளாகத்தினுள்ளும் பல்கலையின் வெளியே ராமநாதன் வீதியில் பொதுமக்களுக்கும் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது யாழ் பல்கலைக்கழக சிங்கள தமிழ் மாணவர்களும், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House