
posted 10th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்த கிண்ணத்தை தனதாக்கிய சென் சேவியர் விளையாட்டுக் கழகம்
மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக இடம் பெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது.
மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக குடத்தனை பொற்பதி சமூகசேவை ஒன்றியத்தின் ஊடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன் பொற்பதி சென் பீற்றர் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (09) ஞாயிறு பிற்பகல் பொற்பதி சென் பீற்றர்ஸ் விளையாட்டு மைதானத்தில் அதன் தலைவர் தலமையில் சிறப்பாக இடம் பெற்றது.
முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாண்ட் வாத்திய அணி வகுப்புடன் மாலை அணிவிக்கப்பட்டு விளையாட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.
மங்கல விளக்கினை நிகழ்வின் பிரதம விருந்தினரான யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சிறப்பு விருந்தினரான மருதங்கேணி கோட்ட கல்வி அதிகாரி சிறிராமச்சந்திரன், பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, கௌரவ விருந்தினரான பொற்பதி கிராம சேவகர் திருமதி பிரதீபன், பொற்பதி பங்குத் தந்தை ஜோன் குறூஸ், உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து தேசிய கொடியினை பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து பருத்தித்துறை லீக் கொடியினை பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் தலைவர் நவநீதமணி ஏற்றினார். பொற்பதி சமூக சேவை ஒன்றியக் கொடியினை பொற்பதி சமூக சேவை ஒன்றிய தலைவர் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து பொற்பதி சென் பீற்றர்ஸ் அணி தலைவர் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து கிறிஸ்தவ, இந்து இறை வணக்கம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலமை உரை என்பன இடம்பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவான சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் மற்றும் யங் லயன் அணியும் மோதியதில் சக்கோட்டை சென் சேவியர் அணி ஒரு கோலைப் போட்டு வெற்றியை தனதாக்கியது.
வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்கள், பதக்கங்கள் பணப் பரிசில்கள் என்பன விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, நீண்ட தூர ஓட்டம், முட்டியுடைத்தல், கிடுகு பின்னுதல், கயிறிழுத்தல் போன்ற விளையாட்டுக்கள் நேற்று (09) காலை முதல் இடம்பெற்றது. இதில் வெற்றியீட்டிய வீர வீரங்கனைகளுக்கான பரிசில்கள், பணப் பரிசில்கள் என்பனவும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் விளையாட்டு வீர, வீராங்கனைகள், ஆர்வலர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)