மன்னார் தீவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் தீவில் நடைபெற்று கொண்டிருக்கும் காற்றாலை நிர்மானத்தாலும் கனியவள மணல் அகழ்வாலும் மிகவும் குறுகிய காலத்துக்குள் மன்னார் தீவு கடலுக்குள் அமிழப் போகும் அபாயம் தோன்றியுள்ளமையால், மக்களின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளதால், மன்னார் பிரஜைகள் குழு இதற்கான தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது. நாம் ஒன்றுபட்டு அழிவிலிருந்து தீவை காப்பாற்ற வேண்டும். பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி அ. ஞானப்பிரகாசம் அடிகளார் வேண்டுகோள்.

இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை (23.08.2022) காலை பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இதன் தலைவர் அருட்பணி அ. ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கிராமங்களினதும் , மதத் தலங்களின் பிரதிநிதிகளும் , மதத் தலைவர்களும் என பலர் கலந்து கொண்டனர்.

இவ் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி அ. ஞானப்பிரகாசம் அடிகளார் உரையாற்றுகையில்

மன்னார் தீவில் இடம்பெற்றுள்ளதும் தொடர்ந்து நிர்மானிக்கப்பட இருக்கும் காற்றாலையாலும், கனியவள மணல் அகல்வாலும் எதிர்காலத்தில் சுமார் 15 வருடங்களுக்கு பிற்பாடு எமது எதிர்கால சந்ததினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் சம்பந்தமாக நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிவர்களாக இருக்கின்றோம். அதற்காகவே நாம் இங்கு கூடியுள்ளோம்.

மன்னார் தீவானது 4 கிலோ மீற்றர் அகலமும் 28 கிலோ மீற்றரும் கொண்டதாக அமைந்துள்ளமையால் நாம் மதம் , இனம் , பிரதேச வேறுபாடுகளை மறந்து எமது மன்னார் தீவை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மன்னார் தீவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இச் செயல்பாட்டுக்கு எமது பகுதியில் ஆதரவாகவும், எதிராகவும் கொண்டவர்களும் இருக்கின்றார்கள் என்பது நாம் அறிவோம்.

இச் செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் பணத்தை இறைத்து தங்கள் வசம் வைத்திருக்கும் குழுவினர்களும் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் மன்னாரையும், கிளிநொச்சியையும் இந்திய நாட்டு அதானிக்கு காற்றாலை அமைப்பதற்கு அரசு வழங்கிவிட்டது.

இலங்கை மின்சார சபையும், காற்றாலை மின் உற்பத்தியில் நிலவி வரும் பழுதுகளை சீர்செய்யும் போர்வையில் புதிய திட்டத்திலும் ஈடுபட்டு வருவது தெரிய வருகின்றது.

தூரநோக்கோடு செயல்படும் எமக்கு கைகொடுத்து உதவவோ அல்லது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை தீர்க்க முன்னெடுத்துச் செல்லக்கூடிய தகுந்த அரசியல் வாதிகள் யாரும் இங்கு கிடையாது என்பது மக்களின் குரலாக இருக்கின்றது.

ஆகவே எமது மக்களுக்காக சேவை புரியும் நாம்தான் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் இந்த மன்னார் தீவை காப்பாற்ற வேண்டிய நிலையிலும் இருக்கின்றோம்.

இங்கு காற்றில் காற்றாலை சுழலுவது தவறு அல்ல. காற்றாலை மூலம் மின்சாரம் பெறுவது தப்பும் அல்ல. ஆனால் இங்கு காற்றாலை அமைக்கப்பட்ட இடம்தான் எமக்கு பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.

இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் அழிக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் தீவில் ஆரம்பத்தில் இடம்பெற்ற காற்றாலை நிர்மானமும், கனியவள மணல் அகழ்வாலும் இதனால் ஏற்படும் தாக்கமும் மக்களுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் இப்பொழுதுதான் மக்களுக்கு இதன் தாக்கம் புரிந்து வருகின்றது.

இந்த செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் மிகவும் சாதுரியமாக மக்களை அணுகி தங்கள் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு காற்றாலை அமைக்க பத்து ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இந்த மன்னார் தீவிலேயே குடிகொண்டிருக்கின்றனர்.

ஆகவே மன்னார் தீவில் காற்றாலை நிர்மானத்தாலும் கனியவள மணல் அகழ்வாலும் இத் தீவு எதிர்காலத்தில் அழிவுறுவுக்கு செல்லாது இருக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் மன்னார் மாவட்டத்தின் பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் தீவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY