மத்திய செயற்குழு தலைவர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
மத்திய செயற்குழு தலைவர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட மத்திய செயற்குழுவின் புதிய தலைவராக, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம்.ஏ. றஸாக் (ஜவாத்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த மக்களின் மனங்களை வென்ற பிரபல அரசியல் பிரமுகரும், சமூக செயற்பாட்டாளருமான இவர் ஏற்கனவே கல்முனை பிரதேச சபை மாநகர சபைகளில் உப தவிசாளராகவும், உறுப்பினராகவும் இருந்து மக்களுக்கு பெரும் சேவையாற்றிய இவர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாவார்.

கல்முனை நகர ஜும்ஆப்பள்ளிவாசலின் தலைவரான கே.எம்.ஏ. றஸாக் (ஜவாத்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், வரவேற்றுமுள்ளனர்.

குறிப்பாக கட்சி முக்கியஸ்த்தர்கள், கட்சிப் போராளிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் முக நூல்கள் மற்றும் நேரிலும் இதற்கான மகிழ்வை வெளிப்படுத்தியும், வரவேற்று வாழ்த்திய வண்ணமுமுள்ளனர்.

இந்நிலையில் தமது மாவட்ட மத்திய செயற்குழு தலைவர் தெரிவு தொடர்பில் குவிந்து வரும் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள றஸாக் (ஜவாத்) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

"எனது அம்பாரை மாவட்ட மத்திய குழு தலைமைப் பதவி கண்டு பலரும் நேரிலும், முக நூலிலும், தொலை பேசியிலும் வாழ்த்தியதில் என் ஏற்பு என்னை மகிழ்ச்சியூட்டியது.

அதைவிட இன்னும் பலர் நகல் கொண்டிருந்தமையும் அறிவேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதற்கு முன் நாம் ருசித்த முஸ்லீம் காங்கிரஸில் இருந்து வேறுபடும் தன்மைகளில் ஜனநாயகம் சார்ந்தவை அதிகமானதாகும்.

அங்கு (SLMCயில்) உச்ச பீடங்கள் அநேக முடிவுகளை சம்பந்தப்பட்ட விடயத்தில் எடுப்பதில்லை.

அதில் தலைவர் தன் சுய முடிவை எடுத்தியம்புவார். அல்லது தலைவர் சுயமாக முடிவேற்கும் அதிகாரத்தை உச்ச பீடம் தலைவருக்கு ஏக மனதாக வழங்கும். இதனை பல தடவை நான் அங்கு சர்வதிகாரம் என்று எதிர்த்திருக்கின்றேன்.

இங்கு (ACMCயில்) அப்படி அல்ல. கட்சி சார்ந்த எவ்விடத்திலும்
தலைவரை கேள்வி கேட்கும் உரிமை அதிகார பீடத்திலுள்ள அனைவருக்கும் உண்டு.

இந்த மகத்தான சுதந்திர யாப்பினை வகுத்த இக்கட்சியின் முன்னாள் செயலாளர் YLS ஹமீதை இக்கட்டத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது.
நன்றிகள் உரித்தாகட்டும்.

இதில் விஷேசம் என்னவென்றால் அக் கேள்விக் கணைகள் ஒவ்வொன்றுக்கும் எவ்வித பதட்டமுமின்றி பணிவுடன் பதிலுரைக்கும் பண்பு தலைவர் றிஷாட் அவர்களில் இருப்பது கண்டு அதிசயத்திருக்கின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்.

SLMC யில் அரசியல் அதி உயர் பீடம் என்றும் ACMC யில் அரசியல் அதிகார சபை என்றும் உச்ச பீடம் அழைக்கப்படுகிறது.

எமது (ACMC) அதிகார சபை உறுப்பினர்களுக்கென தனி Watsapp குழு உண்டு.
அதில் தலைவர் றிஷாட் அதிகார சபையில் எடுக்க வேண்டிய விடயம் சம்பந்தமாக, நடந்த, நடக்கப்போகின்ற அனைத்தையும் எடுத்துரைப்பார்.
எம்மால் எதனையும் கேட்க முடியும். அதன் தெளிவில் கூடிய சபை தீர்மானமாக்கும்.

இது முழுக்க முழுக்க இஸ்லாமிய மஷூரா முறைமையாகும். இது தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் பின்பற்றப்பட்டது. ஆனால் இப்போது இல்லை.

இதற்கு உதாரணமாக எனது இந்த அம்பாரை மாவட்ட மத்திய குழு நியமனத்தை நோக்கலாம்.

இக்குழு கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் 2020ல் பொத்துவிலில் அம்பாறை மாவட்ட கட்சி உறுப்பினர்கள் கூடி உருவாக்கினோம். அதற்கு தலைவராக தேர்தல் வேட்பாளராக அல்லாத ஒருவரை நியமிப்பது என்ற அடிப்படையில் சட்டத்தரணியும், முன்னாள் தவிசாளருமான அன்ஷில் அவர்களையும், செயலாளராக ஜுனைடீன் அவர்களையும், பொருளாளராக காதர் சேர் அவர்களையும் தொகுதி அடிப்படையில் தேர்வு செய்தோம்.

இரண்டு வருடங்களாகிவிட்டது. இதில் மாற்றம் வேண்டும் என்ற அன்ஷில் அவர்களின் தொடர் தென்டிப்பில் தொகுதி அமைப்பாளர்கள் தலைவரிடம் 22-10-2022ல் கூறிய போது அவரின் வழிகாட்டலுக்கிணங்க;

24-10-2022ல் நிந்தவூரில் அம்பாரைத் தொகுதி அமைப்பாளர்கள் கூடி தீர்மானித்தன் அடிப்படையில்;

27-10-2022ல் மாவட்ட மாவட்ட மத்திய உயர்குழ கூடி
தலைவராக என்னையும், உப தலைவராக சகோ: அன்ஷிலையும், செயலாளராக சகோ: காதரையும், உப செயலாளராக சகோ: மனாப்பையும், பொருளாளராக சகோ: கலீல் முஸ்தபாவையும் தேர்வு செய்தது.

இத்தேர்வு நிகழ்வு கல்முனையில் என் வதி வளாகத்தில் இரவு 11.30 வரை நீண்ட நேரத்தை நீட்டிக்கொண்டதற்கான காரணமாக இப்பதவிகளை பொறுப்பேற்க பலரும் தயங்கியமையை குறிப்பிடலாம்.

தலைவர் பதவியை நிந்தவூர் தவிசாளரும், எமது கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான தாஹீரை ஏற்கும்படி நானும், என்னை ஏற்கும்படி அவரும் அதுபோலவே பொருளாளர் பதவியை ஏற்கும்படி ஜுனைடீனையும்,
அவர் கண்டிப்பாக மறுத்து போது;

கட்சியின் மூத்த உறுப்பினரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான முபீத்தையும் வேண்டி இறுதியில் சபையின் வினய வேண்டுதலில் கலீல் முஸ்தபா ஏற்றார்.

ஆனால், தலைவர் அஷ்ரப் அவர்களின் இழப்பிற்கு பின் தலைவர் ஹக்கீம் ஏற்ற இப்பதவி இரண்டு தசாப்தங்களைக் கடந்தும் இன்னும் ஏன் உரிமையானவர்களுக்கு பகிரப்படவில்லை என்றும் என்னிடம் சிலர் கேட்டனர்.

இப்பதவி ஒரு அமானிதம்.
இனி இதனூடாக எம் மண்ணின் உரிமைகளை தேடி, வகைப்படுத்தி, வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை நானும் எமது மாவட்ட உறுப்பினர்களும் செய்ய தங்களின் உளப்பூர்வமான பிரார்த்தனைகளை வேண்டி நிற்கின்றோம்.

கட்சிக் காழ்ப்புகளற்ற நற் கருத்துக்களை அனைத்தையும் தலை சுமக்க காத்திருக்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய செயற்குழு தலைவர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)