பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நாட்டில் ஏற்பட்டுள்ள போதை வஸ்த்துப் பாவனையால் இளைய தலைமுறையினர் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதன் பின்னணியில் கல்முனை மாநகரப் பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களில் போதை வஸ்த்துப் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளணம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் மருதமுனை பிராஞ்சிட்டி றைஹான் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளணத்தின் பதில் தலைவர் அஷ்ஷெய்க் எப்.எம். அஹமதுல் அன்ஸார் மௌலானா தலைமையில் நடைபெற்றது. இங்கு மருதமுனை

விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ.சி.எஸ். ரத்னாயக்க தலைமையில் அதிரடிப்படை உத்தியோகத்தர்களான சின்தரா, நிஸங்க ஜயரத்ன, பி.சி.டீ. ஜயரத்ன மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அபூபக்கர் நஸார், உதவிப் பொலிஸ் பரிசோதகர் எம்.டி.எம். நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்துப் பள்ளிவால்கள் சம்மேளனத்தின் பிரதி நிதிகள் மற்றும் பள்ளிவாசல்களின் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்த கொண்டனர்.. மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர். எம்.ஐ.எம். முகர்ரபின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

இங்கு மருதமுனை விஷேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ.சி. எஸ். ரத்னாயக்க உரையாற்றுகையில்;

The Best Online Tutoring

முப்பது வருடகாலமாக நடைபெற்று வந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இலங்கைப் பொலிசுக்கு தேவையான சந்தர்ப்பங்களின் போது ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட விஷேட அதிரடிப்படை அந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தொடர்ச்சியாக வழங்கிய ஒத்துழைப்பின் பின்னர் தற்போது போதைப் பொருள் ஒழிப்பு, அமைப்பு ரீதியான குற்றக்கட்டுப்பாடு, தலைவர்களைப் பாதுகாத்தல் போன்ற கடமைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதற்கிடையில் தற்போது நாட்டில் இளஞ் சமூகத்தினரை பலியெடுத்துக் கொண்டிருக்கும் போதைப் பொருள் தொல்லைகளைக் கட்டுப்படுத்தவதற்கு பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

தற்போது பெண் பிள்ளைகளும் போதைப் பொருள் பாவிப்பதற்குப் பழகியுள்ளார்கள். பெண்கள் அதிகமாக போதை பொருட்களுக்கு அடிமையாவதற்கு பெற்றோரின் கவனக்குறைவே காரணமாகும். கல்முனை மாநகர பிரதேசத்தலே ஒரு நாள் நாங்கள் ஒரு வீட்டைப் பரிசோதனை செய்தோம்.. அங்கு கஞ்சா, ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள் என்பன காணப்பட்டன. பிள்ளைகளுக்கு வீட்டில் புறம்பான தனி அறை வளங்கப்படுகின்றது.

அந்த அறைக்குள் நடக்கின்ற எந்த விடையமும் பெற்றோருக்குத் தெரியாது. சமூகத்தில் அநேகமான குற்றங்களுக்கு போதைப்பொருள் ஒரு பிரதான காரணமாக உள்ளது. முதலில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகுபவர்கள் அதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முதலில் தனது பெற்றோர்களையும், மனைவிமார்களையும் பலவந்தம் செய்கிறார்கள், தொல்லைப் படுத்துகிறார்கள், அடிக்கிறார்கள்.

குடும்பப்பிரச்சனை ஏற்படுகின்றது. போதைப் பொருள் பாவித்ததன் பின்னர் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை, சண்டைபிடித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள். நாட்டில் தற்போதைக்கு போதைபொருள் வியாபாரிகளுக்கு இடையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதன் காரணமாக ஆளுக்கு ஆள் கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. தற்போது எம்மால் கல்முனை மாநகரப் பிரதேசத்தில் பாரிய ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போதைப் பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு ஏற்ப போதைப்பொருள் ஒழிப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது எமக்குக் கிடைக்கும் வரையருக்கப்பட்ட தகவல்கள் மாத்திரமே. இப்பிரதேசத்தில் போதைப் பொருளை இல்லாது ஒழிப்பதென்பது எம்மாலும், பொலிசாராலும் தனியாக மேற்கொள்ளக் கூடிய ஒன்று அல்ல. அதற்கு மக்களின் ஒத்துழைப்புக்கள் மிகவும் அவசியமாகும்.

சட்டவிரோதமான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வழங்குவது மக்களின் சமூகப் பொறுப்பாகும். எனவே இப்பிரதேசத்தை போதைப் பொருளில் இருந்து விடுபட்ட ஒரு பிரதேசமாக உருவாக்கிக் கொள்வதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டக் கொள்கிறேன் என்றார்.

பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)