
posted 11th November 2021

நாடறிந்த கவிஞர், மறைந்த பாண்டியூரனின் கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட விருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற பிரபலமான எழுத்தாளர்களின் பல காத்திரமான நூல்களைத் தெரிவு செய்து பதிப்பித்து வரும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினதும், அதன் பணிப்பாளர் சரவண முத்து நவரீதனினதும் முன்மாதிரி செயற்திட்டத்தின் கீழ் இந்த நூல் வெளியிடப்பட விருக்கின்றது.
இந்த செயற்திட்டத்தின் கீழான நூல் வெளியீட்டு வரிசையில் வெளியிடப்படவிருக்கும் நாடறிந்த கவிஞர் மறைந்த பாண்டியூரனின் கவிதைத் தொகுப்பினைக் கொண்ட “பாண்டியூரன் கவிதைகள்” எனும் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக்கின்து.
பாண்டிருப்பு, மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் வெளியீட்டு நிகழ்வு ஒழுங்கமைப்புடன் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, நல்லதம்பி மண்டபத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறும்.
பிரபல எழுத்தாளரும், பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஆலோசகருமான உமா வரதராஜன் தலைலைமையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவண முத்து நவநீதன் “பாண்டியூரன் கவிதைகள்” நூலை வெளியிட்டு வைப்பார்.
மேலும் நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேத நாயகம் ஜெகதீஸன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, கவிதாயினி “மலரா” டாக்டர். திருமதி புஸ்பலதா லோகநாதன், மறுமலர்ச்சி சனசமூக நிலைய ஆலோசகர் சபா சபேஷன், தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் சஞ்சீவி சிவகுமார்,
மறுமலர்ச்சி சனசமூக நிலைய உபதலைவர் பா.செ.புவிராஜா, செயலாளர், சி.புனிதன், உப செயலாளர், சிவ.வரதராஜன், கவிஞரின் குடும்ப உறுப்பினர் செல்வி. நடேசன் கௌசிகா அகியோரின் உரைகளும் நிகழ்வில் இடம் பெறவுள்ளன.
கவிஞரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.
இந்நிலையில் கொவிட் - 19 வைரஸ் தொற்றால் நாடும், குறிப்பாக கிழக்கு மாகாணமும் முடங்கியிருந்த போதிலும் பயனுள்ள வகையிலான செயற்திட்டங்களை கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னெடுப்பதற்கு கால்கோளாக விருந்த திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதனை கலை, இலக்கிய கர்த்தாக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்