
posted 5th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

157ஆவது பொலிஸ் தினம்
(ஏ.எல்.எம்.சலீம்)
157ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட துஆப் பிரார்த்தனை கிண்ணியா நத்வதுல் புகாரி அரபுக் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.
நத்வதுல் புஹாரி அரபு கல்லூரியின் அதிபர் மௌலவி எஸ். முனீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிரகமன்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். ஹனி, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாண்டோ மற்றும் கிண்ணியா உலமா சபை, பொலிஸ் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், அரபிக் கல்லூரி மாணவர்கள் உலமாக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஐந்து குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் துர்நாற்றம் வீசும் வாய்க்கால்கள்!
(எஸ் தில்லைநாதன்)
யாழ்ப்பாணம் மாநகரின் மத்தியில் இரு மருங்கிலும் காணப்படும் பிரதான கழிவுநீர் வாய்க்கால்கள் நீண்ட நாட்களாக துப்புரவு செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ். போதனா மருத்துவமனை, பிரதான பேருந்து தரிப்பிடம், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் பல உள்ள பகுதியில் அமைந்துள்ள இந்த வாய்க்கால்கள் அமைந்துள்ளன.
இவை நீண்டநாட்களாக சுத்தம் செய்யப்படவில்லை. பொலித்தீன்கள், போத்தல்கள் நிறைந்துள்ளதால் கழிவுநீர் ஓடுவது தடைப்பட்டு தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகின்றது. இவற்றில், நுளம்புகள் பெருகுவதால் நோய்களும் பரவும் அபாய நிலை உள்ளது.
நோயாளர்கள், மற்றும் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள், சுற்றுலா பயணிகள் என் ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் பகுதியை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு ஏராளமானவர்கள் தினமும் பயன்டுத்தும் இந்தப் பகுதியை உரிய தரப்பினர் உடனடியாகக் கவனத்தில் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் கைது!
(எஸ் தில்லைநாதன்)
மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் ஒருவர் கோப்பாய் போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீற்றர் வட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்
(எஸ் தில்லைநாதன்)
மீற்றர் வட்டிக்கு பணம் பெற்று கடனில் சிக்கிய இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவமானது தினம் (04) யாழ்ப்பாணம் - ஓட்டுமடத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு பணத்தினை பெற்றுள்ளார். இந்நிலையில் மீற்றர் வட்டியினாது அதிகரித்தபடியால், வட்டிக்கு பணம் கொடுத்த தரப்பினரால் வீடு, லொறி, வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் மிகுதி வட்டிப்பணம் செலுத்தாததன் காரணமாக வட்டிக்கு பணத்தினை கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தன்னால் இனி உயிர்வாழ முடியாது என்றும் உயிரை மாய்க்கப் போவதாகவும் கணவனிடம் கூறியுள்ளார்.. அதற்கு கணவன், பத்து மாதத்தில் கைக் குழந்தை உள்ளது எனவே இவ்வாறு தவறான முடிவு எடுக்க வேண்டாம் என கூறிவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார்.
கோவிலில் இருந்து இன்று மதியம் வீடு திரும்பியவேளை வீடானது பூட்டப்பட்டிருந்தது. கதவினை திறந்து உள்ளே சென்று பார்த்தவேளை குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தூக்கில் தொங்கும் தாயாரது கால்களை பிடித்தவாறு 10 மாதங்களே நிரம்பிய குழந்தை அழுதவாறு காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.. பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓட்டுமடம் - யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஜெயராசா அருள்பாலினி (வயது 34) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)