
posted 31st July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

திருநெல்வேலியில் வாள்வெட்டு பல்கலைக்கழக மாணவன் காயம்
எஸ் தில்லைநாதன்
திருநெல்வேலயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது அதிகாலை வேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதன்போது, வீட்டின் தளபாடங்கள், யன்னல்கள் என்பவற்றை உடைத்ததுடன், மாணவர் ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
(ஏ.எல்.எம்.சலீம்)
தண்ணீர் பவுஸர் சைக்கிளை மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து அந்த வாகனம் எரியூட்டப்பட்டது.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிதென்ன பகுதியில் சனிக்கிழமை (30) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாலைநேர வகுப்புக்கு தனது சகோதரனுடன் சென்ற சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
தண்ணீர் ஏற்றி வந்த பவுஸர் பின்நோக்கி சென்றபோது அதனுள் அகப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவன் உயிரிழக்க காரணமாக தண்ணீர் பவுஸரை பொதுமக்கள் ஆத்திரத்தில் தீயிட்டு கொளுத்தினர்.
இந்த விபத்தில் சலீம் ருஸ்திக் என்ற 6 வயது சிறுவனே உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞன்
எஸ் தில்லைநாதன
ஏ - 9 வீதியில் வவுனியா - ஓமந்தை பகுதியில் சோதனை சாவடிக்கு அண்மையாக ஞாயிற்றுக்கிழமை (30) நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த விபத்து ஒன்று இடம்பெற்றது.
இந்த விபத்தில் இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
சோதனை சாவடிக்கு அருகில் வாகனம் ஒன்று பழுதடைந்து நின்றுள்ளது . அதனை வவுனியா நகரிலுள்ள வாகன திருத்தகத்துக்கு இழுத்துச் செல்வதற்காக உழவு இயந்திரம் ஊடாக கட்டியிழுப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அதே திசையில் பயணித்த பாரஊர்தி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரத்தையும் அது இழுத்துச் சென்ற வாகனத்தையும் மோதியது.
இதில், உழவு இயந்திரத்தை செலுத்திய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவர். 1990 நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அதி தீவிர பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடலாமையை மறைத்து வைத்திருந்தவர் கைது!
எஸ் தில்லைநாதன்
மன்னாரில் வீடொன்றில் கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மீட்டனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டிகொட்டுப் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கடலாமை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் உரிய அதிகாரிகளுடன் சென்று குறித்த ஆமையை மீட்டனர். மீட்கப்பட்ட கடலாமை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கடலாமையின் உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலாமையை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலையில் வெடிபொருள் மீட்பு
எஸ் தில்லைநாதன்
அரியாலை கடற்கரையில் ஒரு தொகை ஜெலற்றின் குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படை தெரிவித்துள்ளது.
மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வெடி மருந்துகள் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவை சட்ட விரோத மீன்பிடிக்கு கடற்றொழிலாளர்கள் பயன்படுத்துவது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அமைக்கப்பட்ட 475 அடி மதில் கையளிப்பு
எஸ் தில்லைநாதன்
கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 475 அடி மதில் சனிக்கிழமை (29) சமூகத்திற்கு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
பழைய மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரின் நிதி பங்களிப்புடன் பாதுகாப்பு மதில் அமைக்கப்பட்டது.
குறித்த கட்டுமானத்தின் நினைவுக்கல்லை வைத்திய கலாநிதி எம்.குகராஜா திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காணிகளை ஆக்கிரமிக்கும் அரிசிமலை பிக்கு
(ஏ.எல்.எம்.சலீம்)
தென்னமர வாடி விவசாய காணிகளை பிக்குவிடம் இருந்து மீட்டுத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைக்கும் பகுதியாக தென்னமரவாடி அமைந்துள்ளது. இங்கு, 92 குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தற்போது புல்மோட்டை - அரிசிமலை விகாரையின் பௌத்த பிக்கு தமது காணிகளை ஆக்கிரமித்து வருகிறார் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனால் 45 வருட காலமாக தமது கிராமத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையில், காணிகளின் பற்றைகளை அகற்ற முடியாதுள்ளது. பிக்குவின் அடாவடி செயல்பாடுகளால் மக்கள் இங்கு வருவதில்லை.
போரின் பின்னர் இராணுவம் முகாம் இருந்தது. அவர்களின் வழிபாட்டுக்காக புத்தர் சிலை ஒன்றை வைத்திருந்தனர். தற்போது, அரிசிமலையில் விகாரை ஒன்றை அமைத்து எமக்கு சொந்தமான 150இற்கும் மேற்பட்ட ஏக்கர் காணியை பிக்கு ஆக்கிரமித்துள்ளார் என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறான செயல்பாடுகளை அரச அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஜனாதிபதி மற்றும் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தமக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்றும் - அவர்கள் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)