
posted 13th January 2023
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி வழக்கானது அனுராதபுர நீதவான் நீதிமன்ற நீதிபதி நாணயக்க ஜெயசூரிய முன்னிலையில் திங்கள் கிழமை (09) அழைக்கப்பட்டது.
அத்துடன் மாதிரித் தெரிவும் இடம்பெற்றது.
அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்புக் கருதி வைக்கப்பட்டுள்ள இம் மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்கா புலோரிடா நிறுவனத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்வதற்கு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டன.
இந்த எச்சங்களின் மாதிரிகளை சீ 14 காபன் பரிசோதனைக்கு அமெரிக்கா புலோரிடா நிறுவனத்துக்கு அனுப்படுவதற்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மனித எச்சங்களிலிருந்து மாதிரிகளை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என்றும், அவற்றை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும் என்றும் இவ் வழக்கு அனுராதபுரம் நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் மனித எச்சங்களை அகழ்வுப் பணியில் ஈடுபட்டபொழுது இதற்கு தலைமைதாங்கிய வைத்திய நிபுணர் எல்.பி. வைத்தியரத்தின, வைத்திய கலாநிதி ஹேவகே, பொலிஸ் அதிகாரி லக்ஷரி அத்துடன் குற்ற புலணாய்வு பிரிவினர் தொல்பொருள் திணைக்கத்திலிருந்து விஜயரத்தின மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக இவ் வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் சகிதம் மனித எச்சங்களை பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்றது.
வைத்திய நிபுணர் வைத்தியரத்தின அங்கு வைக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளிலிருந்து ஆறு பெட்டிகளிலுள்ள எச்சங்களை மாதிரியாக தெரிவு செய்வதற்கு நீதிபதியிடம் தெரிவித்த நிலையில் 46, 42, 16, 66, 28 மற்றும் 56 என்ற இலக்கமிடப்பட்டிருந்த பெட்டிகள் வெளியில் எடுக்கப்பட்டன.
இதில் 16 வது பெட்டியை திறந்தபொழுது அதற்குள் சந்தேகத்துக்குரிய மாறுபட்ட இலக்கங்கள் கொண்ட பெட்டிகள் இருந்தன எனவும், இதனால் இப் பெட்டியிலிருந்து மாதிரிக்காக எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக இவ் வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் இதனை நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
பின் ஆறு பெட்டிகளுக்குப் பதிலாக ஐந்து பெட்டிகளிலிருந்து தலா ஒரு மனித எச்சம் கொண்ட பல்லும், 15 சென்றி மீற்றர் கொண்ட ஒரு எலும்புத் துண்டும் பிரித்தெடுத்து ஐந்து பெட்டிகளில் பொதி செய்யப்பட்டன.
புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் கொண்ட பொதி செய்யப்பட்ட பெட்டிகள் செலோ ரேப்பாலேயே சீல் செய்யப்பட்டிருந்ததாக கவனத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர நீதவான் என். ஜெயசூரிய முன்னிலையில் இவ்வாறாக பகுப்பாய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட மனித எச்சங்கள் மன்னார் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கின்றது. இதனை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக இவ் வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
அத்துடன் இந்த மாதிரிகளை தெரிவு செய்வதற்கான செயற்பாடுகுரிய விபரங்களான காலம், திகதி, நேரம் எனக்கோ அல்லது காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக சட்த்தரணிக்கோ தெரிவிக்காமல் வெகு இரகசியமாகவே இந்ந் நிகழ்வு இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மனித புதைகுழியானது மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு நிலத்தடியினூடாக குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் ஆலய வீதிக்கு அருகாமையில் 2013 ஆம் ஆண்டு நீர் வழங்கல் சபையினால் குழாய்கள் பதித்துச் சென்றபோதே கண்டு பிடிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)