தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க சதியா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கிறார் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வட மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) உரையாற்றும்போதே சீ. வீ. கே. சிவஞானம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தனர் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக் கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கின்றார். அந்தளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் மூன்று கட்சிகளும் எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதனுடைய ஒற்றுமை நீடிக்க வேண்டும். எல்லோரையும் அணைத்து செல்லக்கூடிய சுபாவம் கொண்ட சித்தார்த்தன் இந்த முயற்சியை தொடர்வார். என்னைப் பொறுத்தவரையில் தமிழ் அரசு கட்சியின் உப கட்சியின் நிகழ்வே இது. இங்கு அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களே. தற்போது அது உடைந்து இருந்தாலும்கூட அடிப்படையில் தமிழ் அரசு என்ற ஒற்றுமை இருக்கின்றது.

தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது. ஆனால், தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க சதியா?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)