
posted 8th September 2022
156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும் டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடனும் கல்முனை நகரின் முக்கிய பகுதிகள் சிரமதானப் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திக அதிதியாக கலந்து கொண்டு மேற்பார்வை செய்தார். பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும், சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ. வாஹிட் இச் சிரமதான பணிகளை நெறிப்படுத்தியிருந்தார்.
இதன்போது பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதி, பிரதான பஸ் நிலையம், மாநகர சபை அலுவலகப் பகுதி உட்பட வீதியோரங்களில் தேங்கிக் காணப்பட்ட கழிவுகள் அனைத்தும் அகற்றபட்டன.
இதில் பொலிஸ் நிலையத்தின் சமூக சேவை பொலிஸ் பிரிவு, சுற்றுச் சூழல் பொலிஸ் பிரிவு, போக்குவரத்து பிரிவு, சிறு குற்றத்தடுப்பு பிரிவு, பெருங் குற்றத்தடுப்பு பிரிவு, சிறுவர் - பெண்கள் விசாரணைப் பிரிவு என்பன பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)