
posted 3rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஊழியர்களை தாக்கியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்
ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடிவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத பட்சத்தில் நகராட்சி மன்ற அனைத்து ஊழியர்களும் இணைந்து தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என்று ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத் தொகுதியில் கடந்த வாரம் கசிப்பு விற்பனை செய்த கடையிலுள்ள பொருட்களை அகற்றி சீல் வைக்க பொலிஸ் பாதுகாப்புடன் நகராட்சி மன்றச் செயலாளர் தலைமையில் ஊழியர்கள் சென்ற வேளையில், நகராட்சி மன்ற ஊழியர்கள் இருவர் குறித்த பிரதேசத்தில் இருந்த நபர்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
பொலிஸார் பாதுகாப்பு கடமையில் இருந்த நிலையில் இவ்வாறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதுடன், இச் சம்பவத்தினை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது.
அத்துடன், நகர சபையின் ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றார்.
இது தொடர்பில் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இவ் விடயத்தை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து வன்மையாகக் கண்டிப்பதுடன், பொலிஸார் உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதற்கு நகராட்சி மன்ற வேலைத்தள மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் சங்கம் மற்றும் வடக்கு - கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் சங்கம் என்பன ஆதரவு வழங்கி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, உரிய இடத்துக்கு வருகை தந்த நகராட்சி மன்றச் செயலாளர் ஜெயவிஷ்ணு, உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எஸ். பார்த்தீபன் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் இவ் விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்யும் பட்சத்தில் பகிஷ்கரிப்பை கைவிடுவதாகவும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் நகராட்சி மன்ற அனைத்து ஊழியர்களும் இணைந்து, பணிப்பகிஷ்கரிப்பில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாக நகராட்சி மன்ற வேலைத்தள மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் சங்கம் மற்றும் வடக்கு - கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் சங்கம் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)