
posted 1st July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இரத்த வெள்ளத்தில் குடும்பஸ்தரின் சடலம்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியிலுள்ள வீடொன்றில் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மது போதைக்கு அடிமையான இந்த நபர் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கிக் குத்தியதால், முழங்கைக்கும் புஜத்துக்கும் இடையிலான தசைப்பகுதியின் இரத்தக் குழாய் அறுந்து, அதிகளவு குருதி வெளியேறி சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரிய வந்தது.
உயிரிழந்த நபர் ஒரு குழந்தையின் தந்தையாவார். இவர் போதைக்கு அடிமையாகி மனைவியுடன் முரண்பட்டமை தொடர்பாக பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் இதன்போது தெரியவந்தது.
சம்பவ தினமும் போதையில் மனைவியைத் தாக்க முற்பட்டபோது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பிறகு, கோபத்தில் அந்த நபர் ஜன்னல் கண்ணாடியை உடைத்தபோதே இரத்தம் வெளியேறி உயிரிழந்தார்.
இதனை அறிந்த கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முறைப்பாட்டினை பதிவு செய்ததுடன், மரண விசாரணை அதிகாரியும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.
குறித்த குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்ட அறை முழுவதும் இரத்த வெள்ளமாக காட்சியளித்ததாக அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சடலம், பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதிக குருதி வெளியேற்றமே இந்த மரணத்துக்குக் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)