அரசாங்கம் ஜனநாயக  தேர்தலுக்கு செல்ல தயாராக இல்லை - சிறிதரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அரசாங்கம் ஜனநாயக தேர்தலுக்கு செல்ல தயாராக இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை. பா.உ.சி.சிறிதரன்....!

அரசாங்கம் ஒரு தேர்தலுக்கு செல்ல தயாராக இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை. அது நடக்கக் கூடாது என்பதற்க்காகவே முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தலமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிறு (06) யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு சிறிலங்கா பாடசாலையில் இடம் பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளருமான வேலுப்பிள்ளை சிவயோகன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வட அல்லாய் இளங்கோ சனசமூக நிலைய ஏற்பாட்டில் அவரது பிறந்த இடமான வட அல்வாய் இளங்கோ சனசமூக தலைவர் மா. மெய்யழகன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக ஈகை சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், திருமதி சிவயோகன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகுமுமான எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அரியகுட்டி பரஞ்சோதி, பசுபதி சீவரத்தினம், க. தர்மலிங்கம், உட்பட பலரும் ஏற்றியதை தொடர்ந்து மலர்மாலை, மலரஞ்சலி திருமதி சிவயோகன் அணிவித்து அஞ்சலித்ததை தொடர்ந்து மலரஞ்சலி இடம் பெற்றது.

இந்நிகழ்வில் நினைவுரைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அரியகுட்டி பரஞ்சோதி, பசுபதி சீவரத்தினம், க.தர்மலிங்கம், உட்பட பலரும் நிகழ்த்தினர்

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவித்ததாவது.

நாங்கள் இன்னும் ஒரு எல்லையை தொடவில்லை. நாங்கள் ஒரு துளி கூட எங்களுடைய நீண்டகாலம் பேசுகின்ற எங்கள் அரசியல் உரிமைகள் ஒரு புள்ளியைக் கூட. எங்களால் இன்னும் தொட்டு நிற்க முடியாத ஒரு இனமாக நாங்கள் நிற்கிறோம்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறபொழுதே இப்பொழுது வவுனியா மாவட்டத்திலே இவ்வளவு வீதமான காணிகளை காணவில்லை, முல்லைத்தீவு மாவட்டத்திலே இவ்வளவு வீதமான காணிகளை காணவில்லை, மன்னாரிலே காணவில்லை என்கிற செய்திகளைத்தான் படிக்கிறோம்.

யாழ்ப்பாணத்திலே பெருமளவான நிலப்பரப்பு இராணுவத்திடம் இருக்கிறது.

அங்கே சிங்கள குடியேற்றம் நடக்க போகிறதா? என்றெல்லாம் செய்திகளைத்தான் பார்க்கின்றோம்.

இதனை விட இன்று நான் பத்திரிகைகளை பார்க்கின்றபோது பார்த்தேன். பழைய தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலமையிலே மீண்டும் ஒரு எல்லை நிர்ணய குழு ஒன்றினை அரசாங்கம் நியமித்துள்ளனர்.

இங்கு இரண்டு செய்திகள் இருக்கின்றன. ஒன்று இலங்கை ஒரு ஜனநாயக தேர்தலுக்கு தயாராக இல்லை. அவர்கள் விரும்பவில்லை. தேர்தல் நடக்கக் கூடாது உள்ளூராட்சி மன்ற தேர்தல்தான் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்ற போது உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்படுகிறது.

அப்படி என்றால் எல்லை நிர்ணய குழு அறிக்கை வரும்வரை தேர்தல் நடாத்தப்பட முடியாது. அது சட்டம். ஆகவே இது தேர்தலை தள்ளிப்போடுவதற்கான உத்தியாக ஒன்று. இரண்டாவது முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மன்னார் மாவட்டங்களிலே அபகரிக்கப்படுகின்ற தமிழர்களுடைய நிலங்கள் பொலனறுவையோடும் அனுராதபுரதோடும் சேர்க்கப்படுகின்ற நிலங்களை எல்லை நிர்ணயம் செய்து சிங்கள பிரதேசமாக அவற்றை மாற்றுவது. அங்கு சிங்கள பிரதிநிதிகளை உருவாக்குவது. நெடுங்கேணி எவ்வளவு தூரம் அந்த பிரதேச சபை எங்களது கைகளை விட்டு ஒரு சிங்கள பிரதேசமாக. மாறியதோ அதே வகையில் அந்த பரிதேசங்களெல்லாம் சிங்கள மயப்படுத்துகின்ற செயற்பாட்டுக்கு அரசாங்கம் ஒரு பிள்ளையார் சுழியை முதலிலே வகுத்துள்ளது. மிக முக்கியமாக நாங்கள் எல்லோரும் எஙகளுக்குள்ளே இருக்கின்ற பிரச்சினைகளை பேசுகின்றோம். நிமால் சிறிபால டி சில்வா சொல்லுகிறார் நீக்கள் கட்சிகள் எல்லாம் ஒன்றாக வாருங்கள் என்று. யார் யார் எங்களுக்கு ஆலோசனை சொல்வதென்று காலம் இல்லாம் போய்விட்டது. என்றார்.

அரசாங்கம் ஜனநாயக  தேர்தலுக்கு செல்ல தயாராக இல்லை - சிறிதரன் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)