
posted 11th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அனர்த்த நிவாரண பணிகளை அவசரமாக முன்னெடுக்குக
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் அனர்த்த நிவாரண பணிகளை அவசரமாக முன்னெடுக்குமாறு பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை(10) சமர்ப்பிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உட்பட சில சட்டமூலங்கள் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஆரம்பத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கு மாகாணத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைப் பற்றி தமிழில் குறிப்பிட்டார்.
அது பற்றி அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் புல்மோட்டையிலிருந்து, பொத்துவில், பாணமை வரை கரையோரப் பிரதேசங்களிலும் தாழ்ந்த பிரதேசங்களிலும் நீர் வழிந்தோடாது, தேங்கி நிற்பதால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கிணறுகளை சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான கணிப்புகளை அரசாங்க அதிபர்கள் செய்து உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான சமைத்த உணவை வழங்குவதற்கு இந்த மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் அதற்கான கணிப்புகளை செய்து அவற்றை துரியப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த சந்தர்ப்பத்தில் எங்களது கடற்படையை செங்கடலுக்கு அனுப்புவதை விடுத்து, அதிலும் குறிப்பாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அவர்களுடைய கப்பல்களை பாதுகாப்பதற்கு செங்கடலுக்கு அனுப்புவதை விடுத்து படையினரை இப்படியான அனர்த்த நிவாரண பணிகளில் அவசரமாக ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமானது.
இதில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். நேற்று ஜனாதிபதியின் நடவடிக்கையை நான் கடுமையாக விமர்சித்திருந்தேன். இந்த நிலையில் இன்று நான் விடுகின்ற கோரிக்கை, இஸ்ரேலர்களை பாதுகாப்பதை விட்டு விட்டு, கடற்படையை பயன்படுத்தி குறைந்தபட்சம் இந்த பாதிப்புகளை சந்திக்கின்ற கிழக்கு மாகாண மக்களுக்கு இவற்றை செய்வீர்களாக இருந்தால் மிகப்பெரிய உதவியாக இருக்குமென்று சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார். பின்னர் சட்டங்கள் பற்றிய உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)