
posted 5th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நாங்கள் யுத்தத்தை வென்றவர்கள். உங்களை எப்படி நடத்துவதென எங்களுக்கு தெரியும்
“நாங்கள் யுத்தத்தை வென்றவர்கள். உங்களை எப்படி நடத்துவதென எங்களுக்கு தெரியும்“ என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் மிரட்டினார். அவரின் மனதில் கொலைவெறி இருந்ததை பார்க்க முடிந்தது - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன்.
தையிட்டி பகுதியில் மக்களுக்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட விகாரையை அகற்றவும் - காணிகளை விடுவிக்கவும் கோரி நேற்று முன்தினம் புதன் (03) பிற்பகல் ஆரம்பித்த போராட்டம் நேற்று முன்தினம் இரவும் தொடர்ந்தது.
மழை பெய்ததாலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்கியிருப்பதற்ககாகவம் விகாரையின் முன்பாகவுள்ள காணியில் பந்தல் போடப்பட்டது. இந்தப் பந்தலை அமைக்கவிடாது பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர். இது தொடர்பாக சம்பவ இடத்திலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
“சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி இந்த போராட்டம் நடக்கிறது. விகாரைக்கு முன்பாக உள்ள ஜெயக்குமாரின் காணிக்குள், அவரது ஒத்துழைப்புடன் கொட்டகை அமைக்கப்பட்டது. பொலிஸார் மிலேச்சத்தனமாக நடந்து, அவற்றை அகற்ற வைத்துள்ளனர். கொட்டகைகளை அரசுடைமையாக்கி விடுவோம் என மிரட்டினர்.
அங்கிருந்த பொலிஸ் அதிகாரியொருவர், “நாங்கள் யுத்தத்தை வென்றவர்கள். உங்களை எப்படி நடத்துவதென எங்களுக்கு தெரியும்“ என வெறித்தனமாக தெரிவித்தார். அவரது மனதில் கொலைவெறி இருந்ததை பார்க்க முடிந்தது. அவர்கள் சில வேளைகளில் எங்களை கொலைசெய்து விடவும் கூடும். அந்தளவு வெறிகொண்டுள்ளனர். இவர்களை பௌத்த பிக்குகள் வழிநடத்துகிறார்களா அல்லது ரணில் வழிநடத்துகிறாரா எனத் தெரியவில்லை.
அதிலும், ஒரு தமிழ் பொலிஸ்காரர்- தானொரு தமிழன் எனக் கூறிக்கொண்டு வெட்கம் கெட்ட முறையில் சட்டத்துக்கு புறம்பாக உரிமையாளரின் அனுமதியுடன் அமைக்கப்பட்ட கொட்டகையை அகற்றுவதில் அவர்தான் சிங்களம் பேசுபவர்களைவிட தீவிரமாக செயல்பட்டார் - என்றார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஷ் கருத்து தெரிவிக்கையில்,
இரவு நேரத்தில் மக்களை விரட்டியடித்த பொலிஸார், பாராளுமன்ற உறுப்பினர்கள் செ. கஜேந்திரன் சட்டத்தரணி காண்டீபனை சிறைப்பிடித்துள்ளனர். அவர்களை அணுகுவதற்கான எமது உரிமையை தடுப்புக்காவல் போட்டு பொலிஸார் தடுத்துள்ளனர். உதயபால என்கிற பொலிஸ் பொறுப்பதிகாரியும், கலாவினோதன் என்கிற தமிழ் பொலிஸ்காரர் மிருகத்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் நடப்பதை அவதானிக்க முடிகிறது - என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)