
posted 17th January 2023
சமத்துவத்தை நிலைநாட்டுவோம் எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் செயற்திட்டங்களுக்கு எதிராக மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழுவினர் சமூக அமைப்புகள் பலவற்றுடன் இணைந்து மன்னார் நகரில் கவனயிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
செவ்வாய்கிழமை (17) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக இப் போராட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிய மணல் அகழ்வு , தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பாவனை, கடல் அட்டைப் பண்ணை, மக்களின் காணி அபகரிப்பு, பணவீக்கம் - பொருட்களின் விலையேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, போதைப் பொருள் பாவனை, இந்திய மீனவர்களின் வருகை, சோதனைச் சாவடிகளில் ஏற்படுகின்ற அசௌகரியங்கள், காற்றாலை
மின் திட்டங்கள் போன்றவற்றிற்கு எதிராகவே குரல் எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இறுதியில் ஏற்பாட்டுக் குழுவினர் அரச தலைவருக்கான மகஜர் ஒன்றை மன்னார் மாவட்டச் செயலாளரிடம் கையளித்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நேசக்கரம் பிரஜைகள் குழுவினர், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், வட மாகாண பெண்கள் குரல் அமைப்பு, வடமாகாண பெண்கள் சம்மேளனம், வடமாகாண மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் போன்ற அமைப்பினர் இப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)