புலம்பெயர் அமைப்புக்ளை பலவீனப்படுத்தவே பார பட்சமான தடை நீக்கம் ! - சபா குகதாஸ்

தடை நீக்கத்தின் பின்னர் உள் நாட்டில் சிங்கள ஆட்சியாளர் பலரின் இனவாத கோரமான மன வெளிப்பாடுகள் வெளிக்கிளம்பி உள்ளன. அவை இனக் குரோதச் சிந்தனையில் அவர்கள் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்கின்றது. அத்துடன் இலங்கை ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பேரப்பலத்தை அழித்து விடுவார்கள் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்;

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனம்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

தடை நீக்கம் என்பது புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு புதியவை அல்ல. அத்துடன் இந்த தடை நீக்கம் நிரந்தரமானதும் அல்ல. இதனை அத்தனை தமிழர் புலம்பெயர் அமைப்புக்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கும் நிரந்தர தடை நீக்கம் கிடைக்கும். அதுவரை மாறி மாறி வரும் சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக தடை போடுவார்கள். தடை நீக்குவார்கள்.

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் சர்வதேச அரங்கில் தங்களை நம்ப வைப்பதற்கான செயற்பாடுகளை மேற் கொள்ளுதல் அதன் அடிப்படையில் தான் உள் நாட்டிற்குள் பல பிரச்சினைகள் தீர்க்க கூடியதாக இருக்கும் போது அவற்றுள் கரிசனை செலுத்தாது புலம்பெயர் அமைப்புக்களை தடை நீக்க முன் வந்துள்ளது.

தடை நீக்கத்தின் பின்னர் உள் நாட்டில் சிங்கள ஆட்சியாளர் பலரின் இனவாத கோரமான மன வெளிப்பாடுகள் வெளிக்கிளம்பி உள்ளன. அவை இனக் குரோத சிந்தனையில் அவர்கள் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்கின்றது.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை தான் பேரப்பலத்தை உறுதி செய்ய முடியும். இல்லாவிட்டால் இலங்கை ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பேரப்பலத்தை அழித்து விடுவார்கள். கடந்ந நல்லாட்சி அரசாங்கத்தில் நடந்ததை நல்ல பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மறந்தால் சர்வதேச நீதிப் பொறிமுறை கால நீடிப்பு என்ற கட்டமைப்பில் தமிழ் மக்களுக்கு நீர்த்துப் போகும் அபாயத்தையே உருவாக்கும்.

பொருளாதார மீட்சியால் மட்டும் இலங்கையை நிரந்தர அமைதியான நாடாக மாற்றிவிட முடியாது. இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வே நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்ற உண்மையை ராஐதந்திரமாக கொண்டு காய்நகர்த்த ஒற்றுமையாக முன்னெடுக்க புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் தயாராக வேண்டும்.

புலம்பெயர் அமைப்புக்ளை பலவீனப்படுத்தவே பார பட்சமான தடை நீக்கம் ! - சபா குகதாஸ்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)