
posted 15th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகத்தின் இழப்பு வன்னி தமிழ் இனத்துக்கு ஒரு பெரிய இழப்பாகும் - எம்.பி.விநோ
வன்னி தமிழ் மக்களினதும் போராளிகளினதும் அவலங்களை யுத்த காலத்தின் போது உலகிற்கு கொண்டு சென்றவர் அமரர் மாணிக்கவாசகர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோதநோகராதலிங்கம் தெரிவித்தார்.
அமரர் அவர்களின் இறுதிக் கிரிகைகள் வியாழக்கிழமை (13) வவுனியாவில் அவரின் இல்லத்தில் நடந்தபோது வினோதநோகராதலிங்கம் தனது இரங்கல் உரையில் தெரிவிக்கையில்;
பன்முக ஆளுமை கொண்ட ஒரு நல்ல மனிதனை இன்று நாங்கள் இழந்து நிற்கின்றோம்.
தேசிய ஊடகப் பரப்பிலே என்றுமே மறக்க முடியாத ஒரு மனிதர் அமரர் பி. மாணிக்கவாசகம்.
வன்னி மாவட்டத்துக்கு மட்டுமல்ல முழு தேசத்துக்கும் மாணிக்கவாசகம் ஐயாவின் இழப்பு மிகப் பெரிய இழப்பாகும்.
36 வருடங்களுக்கு முன்னர் மாணிக்கவாசகம் ஐயாவும் இவருடன் லேக்கவுஸ் ஊடகவியலாளர் அமரர் விவேகராசா அவர்களும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துடைய முகாமை அடர்ந்த காட்டுப் பிரதேசத்துக்குள் பார்வையிட வந்தபோது நான் முதன் முதலாக சந்தித்தேன்.
மிகவும் பயங்கரமான யுத்தக் காலத்திலே எங்களை அந்த இடத்துக்கு நாடி வந்து போராளிகள் அவ்வாறு பொது மக்கள் கொண்டுள்ள இன்னல்களை உலகத்துக்கு கொண்டு சென்றவர்தான் இந்த மாணிக்கவாசகம் ஐயா அவர்கள்.
ஒரு மக்கள் பிரதிநிதியாக அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இருப்போருக்கு ஒரு ஊடக அறிக்கை எப்படி தயாரிக்கப்பட வேண்டும்.. அது எவ்வாறு மக்களை சென்றடைய வேண்டும் என்று எனக்கு கற்றுத் தந்தவர் இவர்.
நாங்கள் ஒரு மக்கள் பிரதிநிதியாக இங்கு தேர்ந்து எடுப்பதற்கு அவருடைய அறிவுரைகள், ஆலோசனைகள் எங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்தமை எங்களுக்கு அது பெரிய உதவிகளாக இருந்துள்ளது.
வன்னி மாவட்டத்தை உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றவர் அமரர் மாணிக்கவாசகர். றொயிட்டர் , பிபிசி மற்றும் வீரகேசரி ஆகிய ஊடகப் பரப்பிலிருந்து தமிழ் இனத்தை அடையாளம் காட்டிய மிகப் பெரிய மனிதர். இவரை நாம் ஒரு மாமனிதராக பார்க்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)