மண்ணறை வாழ்வுக்காக பிரார்த்திப்போம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மத் அக்மலின் அகால மரணம் குறித்து தாம் கவலையடைந்துள்ளதாகவும், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்க பிரார்த்திப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"மர்ஹூம் அக்மல் சிறந்த நற்பண்புகளை தன்னகத்தே கொண்டவராகவும், கற்பிட்டி பிரதேச மக்களுக்கு அரசியல் ரீதியாக தலைமைத்துவத்தினை வழங்கக் கூடிய ஒருவராகவும் காணப்பட்டார்.

அதேபோன்று, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு, அதிக வாக்குகளால் உறுப்பினராக தெரிவானார். இதன் பிற்பாடு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்ட சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நீண்டகால தேவையாக இருந்து வந்த பாராளுமன்ற உறுப்புரிமைக்காக அவர் போட்டியிட ஆர்வத்துடன் இருந்த வேளை, கட்சியின் தலைமை என்ற வகையில், என்னால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற விட்டுக்கொடுப்புடன் கூடிய தியாகம் செய்தவராவார். அது மட்டுமல்லாது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறும் போராட்டத்தில், முழு மூச்சாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒருவராக மர்ஹூம் அக்மல் இருந்துள்ளார்.

இவ்வாறு புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களுக்காக அவர் செய்த தியாகத்திற்கு, ஐக்கிய தேசிய கட்சி அவரை பிரதேச சபை உறுப்புரிமையில் இருந்து நீக்கியமையினையும் இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.

புனித ரமழான் மாதத்தின் இறுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் காரணமாக, அல்லாஹ்வின் ஏற்பாட்டின் பிரகாரம் அவரது உயிர் பிரிந்துள்ள நிலையில், அன்னாரின் மறுமை வாழ்க்கை ஒளி பொருந்தியதாக அமைய பிரார்த்திக்கின்றேன். அத்துடன், எமது கட்சியின் அனைத்து அங்கத்தவர்களும் அவருக்காக தமது பிரார்த்தனைகளை செய்யுமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.

ஈடுசெய்ய முடியாத அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அவரது குடும்பத்தினருக்கு மன ஆறுதலையும், இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையினையும் வழங்குவானாக! ஆமீன்!" என்று தெரிவித்துள்ளார்.

மண்ணறை வாழ்வுக்காக பிரார்த்திப்போம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)