
posted 19th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

சாவகச்சேரியில் வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் தீக்கிரை!
(தில்லைநாதன்)
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கத்தானை பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இனம் தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
சங்கத்தானை, தாமோதரம்பிள்ளை வீதியில் உள்ள வீட்டுக்குள், நேற்று (18) அதிகாலை 3.30 மணியளவில் புகுந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததாக வீட்டிலுள்ளவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவர் வெளிநாட்டில் தொழில் புரியும் நிலையில், தாயும், மூன்று மகள்களும் வசித்து வந்த வீட்டிலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
வவுனியா விபத்தில் ஒருவர் பலி!
(எஸ் தில்லைநாதன்)
வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களிற்குள்ளாகினார்.
விபத்து தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தர்மபுரம் குளத்தில் ஆணின் சடலம் மீட்பு!
(எஸ் தில்லைநாதன்)
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீன் பிடிக்கச் சென்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தொழிலில் ஈடுபட்டிருந்தபொழுது உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தாய் பேசவில்லை என்ற மனவிரக்தியில் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!
(எஸ் தில்லைநாதன்)
தாய் பேசவில்லை என இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து எலிப்பாசனம் அருந்தி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் அவருடன் சிலநாட்கள் பேசவில்லை. இதனால் மனமுடைந்த நபர் கடந்த 14ஆம் திகதி எலிப்பாசனம் அருந்தியுள்ளார்.
இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க் கிழமை (15) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கராசா சதீஷ் (வயது 41) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 8மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றும் உள்ளது.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
இரு வேறு குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது
எஸ் தில்லைநாதன்
இரு வேறு குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேசிய பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள சுண்டிகுளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்ட ஜே.சி.பி இயந்திரம் ஒன்றும், அனுமதிப்பத்திரம் இன்றி உழவு இயந்திரத்தில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்களும் அதன் சாரதிகள் நால்வரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய செவ்வாய்க் கிழமை 15.08.2023 சுற்றி வளைக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர்கள் நான்கு பேரும் இன்றைய தினம் 16.08.2023 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)