
posted 31st May 2022
இலங்கையின் சட்டங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தல் மற்றும் பாரபட்சமான போக்கு என்பன குற்றவாளிகளை தப்பிக்க வைத்து பாதுகாக்கப்படும் நடைமுறை காணப்படுகின்றது என சிறுமியின் கொலை தொடர்பாக மன்னாரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கையில் அட்டுலுகமவை சார்ந்த 9 வயது சிறுமி மனித தன்மையற்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் வடக்கு கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரிலும் இடம்பெற்றது.
இப் போராட்டத்தின்போது;
'பச்சிளம் குழந்தைகளுக்கு ஏன் வன்கொடுமை'
'சிறுவர் துஷ்பிரயோகத்தை நிறுத்து'
'சிறுவர்களே எமது எதிர்காலம்'
'சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்'
போன்ற பதாதைகளை தாங்கியவர்களாக பல பெண்கள் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அண்மையில் இலங்கையில் அட்டுலுகமவை சார்ந்த 9 வயது சிறுமி மனித தன்மையற்று கொலை செய்யப்பட்ட சம்பவமானது அனைத்து மக்களையும் முழு நாட்டையும் ஆட்டி வைத்திருக்கின்றது.
இவ்வாறான வன்முறைகளில் இருந்து சிறுமிகளையும், பெண்களையும் காப்பாற்றுவது, பாதுகாப்பது சமூகத்தினதும் அரசினதும் கடமையாகும்.
இலங்கையில் சட்ட ஆட்சி முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை சிறுமியின் கொலை சம்பவம் கண்கூடாக காட்டி நிற்கின்றது.
இலங்கையின் சட்டங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தல் மற்றும் பாரபட்சமான போக்கு என்பன குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து பாதுகாக்கப்படும் நடைமுறை காணப்படுகின்றது.
இதனால் குற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டே இருக்கின்றனர்.
சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கும், கொடுமைகளுக்கும் பொறுப்பான குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகி குற்றவாளிகளை ஏற்படுத்துவதாகவே அமையும். அத்துடன் குற்றம் நிறைந்த ஒரு சமூகத்தை மேலும் வலுவுள்ளதாக்கும்.
எனவே சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கமே இணைய வேண்டும் எனக் கூறுகின்றோம். மேலும், 9 வயது சிறுமியின் கொடூரமான கொலையின் உண்மைத்தன்மை வெளிக்கொணர வேண்டும்.
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த வன்முறைகள் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றில் பல வருடங்களாக நிலுவையில் இருந்து வருகின்றன.
எனவே நிலுவையில் உள்ள வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, குற்றம் நடந்து மூன்று மாத காலத்துக்குள் தீர்வு வழங்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
அது மட்டுமின்றி, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விசேட நீதிமன்ற விசாரணை முறைகள் இலங்கையில் நடைமுறைக்கு வரவேண்டும் எனக் கோருகின்றோம்.
9 வயதான சிறுமி ஆத்மா சாந்தியடைய வேண்டுதலுடன், குடும்பத்தாருக்கும் எமது அனுதாபங்களையும், ஆறுதல்களையும் இந்நாளில் தெரிவித்துக் கொள்கின்றோம் என இப் போராட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY