
posted 8th July 2024
ஒரே நாளில் பத்தாயிரம் பக்தர்கள் கானகத்துக்குள் பிரவேசித்தனர்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலய ஆடிவேல் திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது, வழக்கத்துக்கு மாறாக சுமார் பத்தாயிரம் பக்தர்கள் கானகத்துக்குள் பிரவேசித்தனர்.
இதேவேளை, கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழாவை முன்னிட்டு இம்முறை மேற்கொள்ளப்படும் பாதயாத்திரை வரலாறு காணாத வகையில் உள்ளது என ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா தெரிவித்தார்.
வழமையாக பாதயாத்திரை ஆரம்பதினம் மற்றும் கொடியேற்றத் தினங்களில் சுமார் மூவாயிரம் அல்லது நாலாயிரம் பக்தர்கள் காட்டுக்குள் பயணிப்பார்கள்.
ஆனால், இம்முறை கடந்த 30 ஆம் திகதி முதல் நாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கானகப் பாதை திறந்து வைக்கப்பட்ட அன்றைய தினம் மட்டும் சுமார் 7,000 அடியார்கள் கானகத்துக்குள் பிரவேசித்தனர்.
இதேவேளை, வனஜீவராசிகள் திணைக்களப் பதிவின்படி நேற்று முன்தினம் மட்டும் 9,321 பக்தர்கள் காட்டுக்குள் பயணித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 25,000 மேற்பட்ட பாதயாத்திரிகர்கள் கானகத்தினுள் பிரவேசித்து இருக்கின்றார்கள் எனவும் சுதுநிலமே தெரிவித்தார்.
அத்தோடு, ஆறு நாட்களாக கானகத்துக்குள் பயணித்து கதிர்காமக் கந்தன் ஆலயத்தை சுமார் பத்தாயிரம் பாதயாத்திரிகர்கள் வந்தடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இம்முறை வடக்கு - கிழக்கிலிருந்து சுமார் 10, 000 அடியார்கள் கொடியேற்றத்தில் கலந்து கொண்டார்கள். எதிர்வரும் 11 ஆம் திகதி வரை காட்டுப்பாதை திறந்திருக்கும்.
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர், கதிர்காமத்தை அடைந்து கதிரமலை ஏறி அவர்களது நேர்த்தியைப் பூர்த்தி செய்தனர்.
இன்னும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பாதயாத்திரிகர்கள் கானகத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இம்முறை பயணம் அனைவருக்கும் சாதகமாக அமைந்திருந்தது. காரணம் காலநிலை சிறப்பாக இருந்தது.
எனினும் இரண்டு இடங்களிலே பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கணக்கெடுப்பு நடைபெறுவது பக்தர்கள் இடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)