
posted 20th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
"பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்", "கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா?" இவ்வாறு கேள்வியெழுப்பிய அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (19) ஒன்று கூடி காரைதீவு சந்திக்கு அருகில் தமது பிள்ளைகளுடன் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏனைய மாவட்டங்களைப் போன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், தமது தொழில் நியமனத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.
- வயது ஏறுகிறது வாழ்க்கை போகுது
- வேலை வேண்டும், வேலை வேண்டும்
- நாம் கண்ட கனவு பொய்யாகிவிடுமோ?
- பட்டம் வீட்டில் நாங்களோ றோட்டில்
- அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தை அழிக்காதே
போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
வருடங்கள் போகப்போக வயது ஏறுவுதனால் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் ஏக்கத்திலும், வாழ்க்கை தொலைந்து விடும் என்னும் அச்சத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தெரிவித்தனர்.
தமது போராட்டம் தொடர்பில் இதுவரையில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என்றும், பட்டதாரிகள் கவலை வெளியிட்டனர்.
குறித்த கவனவீர்ப்புப் போராட்டமானது சிறிது தூரம் பேரணியாக இடம்பெற்றதுடன், அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் உதுமாலெப்பை முகமது முஹ்சீன், செயலாளர் அப்துல் வஹாப் முப்லிஹ் அகமட் உட்பட பிரதிநிதிகளும் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்தோடு, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் உள்ளிட்டவர்களும் பட்டதாரிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பேரணியிலும் பங்கேற்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)