
posted 7th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விட்ட தவறுகளைச் சரி செய்ய பொது வேட்பாளரே ஒரே தெரிவு - ஐங்கரநேசன்
ஜனா. திபதித் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளாக அல்லாமல் இனமாகச் சிந்தித்தால் தமிழ்ப் பொதுவேட்பாளரே ஒரேயொரு தெரிவாக இருக்க முடியும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கலாநிதி விக்கிரமபாகு கருணரட்னவின் நினைவுகூர் நிகழ்வு நேற்று முன்தினம் (04) திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
தமிழ்த்தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற எண்ணக்கரு 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்வைக்கப்பட்டது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களின் உரிமைப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக ஆதரித்து வந்த விக்கிரமபாகு கருணரட்ண தமிழ்தரப்பின் பொது வேட்பாளராக முன்மொழியப்பட்டும் இருந்தார்.
ஆனால், இதனைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கருத்தில் எடுக்காது முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் நேரடியாகவே பங்கேற்ற சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாக முடிவெடுத்தனர்.
தமிழ் மக்களைச் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கவைத்துப் பெரும் வரலாற்றுத் தவறிழைத்தனர். தற்போது, சரத்பொன்சேகா இராணுவம் குற்றமிழைத்திருந்தால் தமிழ் மக்கள் எவ்வாறு தனக்கு வாக்களித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றார்.
மேட்டுக்குடி தமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் தெற்கில் ஐக்கிய தேசியக்கட்சியையே ஆதரித்து வருகின்றார்கள். ரணில் விக்கிரமசிங்கவுக்காகவே யுத்தத்தை முன்னெடுத்த தளபதிக்கு இரத்த நெடில் அகல முன்பாக வாக்குக் கேட்டார்கள். அத்தேர்தலில் விக்கிரமபாகு கருணரட்ன போட்டியிட்டுச் சில ஆயிரக்கணக்கான வாக்குகளையே பெற்றிருந்தார்.
அவருக்குத் தமிழ் மக்கள் ஆதரவளித்திருந்தால்கூட பேரினவாதத்தை எதிர்த்து அவரால் வெற்றிபெற்றிருக்க முடியாது. ஆனால், அவரை நாம் ஆதரித்திருந்தால் அவரைப்போன்று தமிழ் மக்களின் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆதரிக்கக்கூடிய பல விக்கிரமபாகுக்களைத் தென்னிலங்கையில் நாம் உருவாக்கியிருக்க முடியும். இவரின் மறைவோடு சிங்கள மக்கள் மத்தியில் எங்களுக்காகப் பேசி வந்த ஒரேயொரு குரலும் இல்லாமற் போய்விட்டது.
மாகாண சபைத்தேர்தலைத் திட்டமிட்டு நடத்தாமல் விட்டவர்களே இப்பொழுது ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற் கொண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது பற்றிப் பேசுகின்றார்கள். தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேரம் பேசுதல், கனவான ஒப்பந்தம் செய்துகொள்ளல் எல்லாம் கடந்தகாலக் கசப்பான அனுபவங்களாக எம்முன்னால் உள்ளன. தொடர்ந்தும் தவறிழைத்துக்கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதித் தேர்தல்களில் நாம் விட்ட தவறுகளைச் சரிசெய்ய வேண்டிய நேரம் இது.
தமிழ்த்தேசிய அரசியலை நேர்செய்ய வேண்டிய தருணம் இது. தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் இனத்தின் ஒருமித்த ஒரு குறியீடு. அவர் யார்? அவரால் என்ன செய்ய முடியும்? என்று உரசிப்பார்த்துக்கொண்டு இருக்காமல் தமிழ் மக்கள் ஒரு இனமாகச் சிந்தித்து அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)