posted 12th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ரவிராஜ், பரராஜசிங்கம், மகேஸ்வரன் கொலைகளுக்கு நீதி கிட்டவேண்டும்
ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரை கொலை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பல பாரதூரமான பிரச்சினைகள் எழுந்துள்ளன. அத்துடன், சமூகம் எங்கும் வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இது தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தை அரசியலாக்க நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன்.
சமூகத்தில் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இதற்கு அரசாங்கம் எடுத்துள்ள அல்லது முன்வைக்கும் தீர்வு யாது?
- சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதன் மூலம் வன்முறையை ஒழிக்க எதிர்க்கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும்.
- வன்முறைகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் கொண்டுள்ள திட்டம் என்ன?
இது குறித்து பேசுவதற்கு நான் பயப்படவில்லை. இது பேசப்பட வேண்டிய தலைப்புத்தான். வன்முறைகள் காரணமாக நாட்டின் பொது மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான வேலைத் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான வன்முறைகளை வைத்துக் கொண்டு ஒரு நாட்டால் முன்னேற முடியாது.
சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி வலுவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒரே கருத்தில் இருக்கின்றனர் என்றே நான் நினைக்கிறேன். அரசாங்கம் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரை கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
கீத் நொயர், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்களை தாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
லசந்த விக்கிரமதுங்கவின் சிறந்த நண்பர் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார். என்றாலும் லசந்த விக்ரமதுங்கவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி
ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)