
posted 24th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க அனுமதியளித்தது அமைச்சரவை
கொரோனா வைரஸ் தொற்று பரவலின் போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகன முறைமையால் பாதிக்கப்பட்ட சமூகத்தினரான முஸ்லிம் மக்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரும் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அரச பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்தார்.
கோவிட் - 19 மருத்துவ முகாமை குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட வழிகாட்டல்களின்படி தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. எனினும், 2021 பெப்ரவரி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
2021 ஜூலையில் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன், அப்போதைய நீர் வழங்கல் அமைச்சு கொழும்பு, கண்டி மாவட்டங்களில் 'சார்ஸ் - கோவ் - 2' வைரஸைக் கண்டறியும் ஆய்வை தொடங்கியது. ஆற்று நீர் மற்றும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் மையங்கள், சாத்தியமான ஏனைய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வில் நீரில் சார்ஸ் கோவ் 2 வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், குறித்த நீரில் வைரஸ் இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்தது.
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் 2024 மார்ச்சில் சீனா - இலங்கை கூட்டு ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட ஆய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், நிலத்தடி நீர் உள்ளிட்ட நீரேந்து பகுதிகளில் சார்ஸ் கோவ் 2 வைரஸ் பரவுவது பாதுகாப்பான புதைகுழிகள் மூலம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் முன்வைத்த பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடம். மன்னிப்புக் கோரும் கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அத்துடன், ஒரு நபர் அல்லது உறவினர் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இறந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு அனுமதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த சட்டமூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)