முஸ்லிம் புத்திஜீவிகள் செயற்பாட்டில் இறங்க வேண்டும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அதிகாரப் பகிர்வு விடயத்தில் முஸ்லிம் புத்திஜீவிகள் செயற்பாட்டில் இறங்க வேண்டும். இவ்வாறு சட்ட முதுமாணியும் முஸ்லிம் அரசியல் பிரமுகருமான வை.எல்.எஸ். ஹமீட் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அதிகாரப் பகிர்வு விடயத்தில் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். சூழ்நிலைகள் பலவந்தப்படுத்தினாலேயொழிய ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெற வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் உரிய காலத்திற்குமுன் நடாத்த முடியாது.

எது எவ்வாறிருந்தபோதிலும் ஜனாதிபதித் தேர்தலை மனதிற்கொண்டு ஒரு தீர்வினைத் தமிழ்தரப்பிற்கு வழங்க ஜனாதிபதி முனைப்புக் காட்டுவது புரிகிறது. 2/3 பெரும்பான்மை கிடைக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் எதையும் இப்பொழுது அறுதியிட்டுக் கூறமுடியாது.

இந்நிலையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இதுவரை தெளிவான நிலைப்பாடுகள் இல்லை. அதிகாரப்பகிர்வு என்பது வட- கிழக்கு இணைப்பு, பிரிப்பு சம்பந்தமானது; என்பதே பலரது பார்வையாக இருக்கின்றது. அதற்கு அப்பால் எதுவும் தெரியாது. அதுப்பற்றி சிந்திப்பதற்கும் ஆயத்தமில்லை.

இதில் மிகவும் பரிதாபகரமான நிலை என்னவென்றால் வட- கிழக்கிற்கு வெளியில் வாழும் சாதாரண முஸ்லிம்கள் மட்டுமல்ல, சில புத்தி ஜீவிகள் கூட, அதிகாரப் பகிர்வு வட - கிழக்கிற்கே தாக்கம் செலுத்தக் கூடியது.

அதற்கு வெளியே அல்ல என்றுதான் நினைக்கிறார்கள். அதிகமான மலையகத் தலைவர்களும் அவ்வாறே நினைக்கிறார்கள். வட - கிழக்கை விட வெளியே வாழுகின்ற சிறுபான்மைகள் மீதுதான் அதிகாரப்பகிர்வு பாரதூரமான எதிர்மறைத் தாக்கத்தைச் செலுத்தப் போகிறது என்பதை ஏனோ அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது. சமஷ்டி அதைவிட பேராபத்தானது என்பது தொடர்பில் சமூகத்திற்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. கண்மூடித்தனமாக அரசியல் தலைமைகளை நம்பும் ஓர் சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது.

சமூகத்தில் எதுவித அக்கறையுமற்ற அரசியல் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். தலைவர் மறைந்து 22 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் தலைவரின் பெயரைச்சொல்லி அரசியல் செய்யும் கட்சிகள் சமூகத்திற்காக தீர்த்துக்கொடுத்த பிரச்சினை எதுவுமில்லை.

முஸ்லிம்களில் அன்றி தமிழ்த்தரப்பில் அதிக அக்கறை கொண்ட முஸ்லிம் தலைவர்களைக் கொண்ட சமூகம் நாம். தமிழர் கோருகின்ற வட- கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கத்தை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் வழங்க, கடிதம் எழுதி கையொப்பம் வைக்கமுனையும் தலைவர்களைக் கொண்ட சமூகம் நாம்.

கல்முனையைக் கூறுபோட எத்தனிக்கும் தமிழ்த் தலைவர்களிடமிருத்து கல்முனையைப் பாதுகாத்துத்தர, அதற்காக உருப்படியான ஒரு பேச்சை பாராளுமன்றத்தில் பேசுவதற்குக்கூட வக்கற்ற தலைவர்களைக் கொண்ட சமூகம் நாம்.

இந்நிலையில், ஏற்கனவே, நல்லாட்சியில் வரையப்பட்ட யாப்பு வரைபில் பல விடயங்கள் முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் பாதிக்கக் கூடியாதாய் இருக்கின்றன. சமஷ்டிக்கும் மேலான அதிகாரப்பகிர்வு அதில் முன்மொழியப்பட்டிருக்கின்றது.

எனவே, அதகாரப் பகிர்வுக்கான முஷ்தீபுகள் நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில் அரசியல் தலைமைகளை நம்பி முஸ்லிம் சமூகம் ஏமாந்துவிடக் கூடாது. நாம் தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிரானவர்களல்ல. ஆனால் அது முஸ்லிகளை ஓர் இருண்ட யுகத்திற்குள் தள்ளிவிடக் கூடாது.

ஏதோ ஓர் தீர்வுத் திட்டம் வரப்போகிறது. அது நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பது வேறுவிடயம். அவ்வாறு தீர்வுத் திட்டம் வெளிவரும் போது நாம் தடுமாறிக் கொண்டிருக்க முடியாது. 21 வது திருத்தத்தில் அரசியலமைப்பு சபையில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் வரக்கூடிய விதத்தில் ஒரு வரியை சேர்க்க வக்கற்ற தலைவர்கள்தான் நம் தலைவர்கள். கோட்டாவின் 20 இன் பாராளுமன்ற சபையில் ஒரு முஸ்லிம் வருவதை உறுதிப்படுத்தக் கூடிய சரத்து இருந்தது. (அந்த சபைக்கு அதிகாரம் இருந்ததா? இல்லையா? என்பது வேறுவிடயம்)

எனவே, இந்த சூழலில் புத்திஜீவிகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒன்றுசேர வேண்டும். தீர்வுத் திட்டத்தில் நமது உரிமைகளைப் பாதுகாக்கும் அம்சங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பதை அடையாளம் காண வேண்டும். பின்னர் பல பிரதேச புத்திஜீவிகளை இணைத்த ஒரு சம்மேளனம் உருவாக்கப்பட்டு அவற்றில் ஒரு பொது நிலைப்பாடு எட்டப்பட வேண்டும்.

அதனை முஸ்லிம் கட்சிகளிடம் சமர்ப்பித்து அதுவே அவர்களின் நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும். அதேபோன்று, அரசிடமும் எதிர்க்கட்சிகளிடமும் அந் நிலைப்பாட்டை சமர்ப்பித்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.

தயவுசெய்து பஸ் போன பின் கைகாட்டாமல் இப்பொழுதே புத்திஜீவிகள் செயற்பட முன்வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் புத்திஜீவிகள் செயற்பாட்டில் இறங்க வேண்டும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY