
posted 13th May 2022
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான தரவுகள் ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழினப் படுகொலையை குறிக்கும் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்றிலிருந்து ஆரம்பமாகியுள்ள நிலையில் முன்னணியினரால் குறித்த இன அழிப்பை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி மற்றும் மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவணக் காப்பகத்தின் ஏற்பாட்டில் குறித்த தமிழினப் படுகொலை நிகழ்வுகள் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)