
posted 28th August 2021

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் மரணம் அதிகரிப்பானது கவலை அளிப்பது மட்டுமல்ல இது எமக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் காணப்படுகின்றது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது நிலவிவரும் கொரோனா தொற்று மற்றும் மரணம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் மன்னார் மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.08.2021) மூன்றும் அதற்கு முன் தினம் இரண்டு கொரோனா மரணங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுள்ளது
மக்கள் இதை எமக்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் பயணத்தடையை மீறி நடப்பதற்கு உபாயம் தேடுவதை விடுத்து நோயின் கனாகனத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்
அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே பயனுள்ள விடயங்களை மேற்கொள்வதன் மூலம் தம்மையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பதுடன் ஏனைய மக்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என நான் இந்த வேளையில் மன்னார் மாவட்ட மக்களை அன்போடு கேட்டு நிற்கிறேன்.
பணம் எப்போதாவது உழைத்து கொள்ள முடியும் நமது அன்பிற்குரியவர்களின் இழப்பு திரும்ப பெறமுடியாது ஒன்றாகும்.
எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்பட்டு சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா என்னும் கொடிய நோய் நமது நாட்டில் இருந்து இல்லாமல் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ