
posted 21st September 2021

வைத்திய கலாநிதி த. வினோதன்
மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்றாளர்களும் மரணங்களும் குறைந்து காணப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட்டதும் மற்றும் தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டமும் ஒரு காரணமாக அமைந்துள்ளன என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதத்தோடு இந்த மாதம் (செப்டம்பர்) கொரோனா தொடர்பாக ஒப்பிட்டு பார்க்கையில் இந்த மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமும் இதுவரை குறைந்து காணப்படுகின்றது.
இதற்கு இரு முக்கிய காரணங்கள் பிரதானமாக இருக்கலாம். அதாவது மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட செயற்பாடுகள் வினைத்திறனாக இருந்தமையும் அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இருந்தமையும் ஆகும்.
ஓகஸ்ட் மாதத்தில் மொத்தமாக 643 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டார்கள் இது ஒரு நாளைக்கு 20.7 ஆக காணப்பட்டது. இதில் இந்த மாதம் நேற்று வரை (19.09.2021) 351 ஆக காணப்படுகிறது. அதாவது, இது ஒரு நாளைக்கு 18.4 விகிதாசாரமாக காணப்படுகிறது
ஓகஸ்ட் மாதம் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பத்து மரணங்கள் இடம்பெற்றன. இதை நோக்கும்போது இம் மரணங்கள் மூன்று நாளைக்கு ஒரு மரணம் என்று விகிதத்தில் காணப்பட்டது.
ஆனால் செப்டம்பர் மாதத்தில் இம் மரண எண்ணிக்கை குறைவடைந்து அவை நான்காக காணப்படுகிறது. இது சுமார் 5 அல்லது 6 நாளைக்கு ஒரு மரணம் என்ற விகிதத்தில் குறைவடைந்து காணப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும் போது எம்மால் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 67. 66 சதவீதமாக முதலாவது தடுப்பூசியை வழங்கக் கூடியதாக இருந்தது. பின் இம் மாதம் (ஓகஸ்ட்) முடிவடையும்போது முதலாவது தடுப்பூசி 78.5 ஆகவும். இரண்டாவது தடுப்பூசி 64.62 வீதமானோருக்கு ஏற்றப்பட்டிருந்தது.
19.09.2021 அதாவது கடந்த ஞாயிறு வரை மன்னார் மாவட்டத்தில் இதுவரை முதலாவது தடுப்பூசி 92.7 வீதமும். இரண்டாவது தடுப்பூசி 72.2 வீதமானோருக்கு ஏற்றப்பட்டுள்ளது.
ஆகவே மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைவடைந்ததிற்கு மிகவும் பிரதானமாக இருப்பவை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வினைத்திறனான முறையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதே காரணம் என்று கூறலாம்.
அது தவிர தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டமும் இதில் பங்களிப்பு செய்துள்ளது என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ