
posted 28th September 2021

மன்னார் ஆயர் இம்மானுவேல் ஆண்டகை
மன்னார் மருதமடு ஆலய கோவில்மோட்டை காணி தொடர்பாக தமிழ் மக்களுக்கிடையே நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு வேறு மொழி பேசுவோரையும் வேறு மதத்தைச் சார்ந்தவர்களையும் ஏன் இங்கு அழைத்துவரப்பட வேண்டும் என்பதே எனது கேள்வியாக அமைகின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு சந்தேகம் எழுப்பினார்.
தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் மடு பகுதியில் நிலவிவரும் கோவில்மோட்டை விவசாய காணி தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் செவ்வாய் கிழமை (28.09.2021) நண்பகல் ஆயர் தலைமையில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் ஆயர், மடு ஆலய பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார், முன்னாள் மடு பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் மற்றும் மறைமாவட்ட காணிகளுக்கு பொறுப்பாளர் அருட்பனி இ. அன்ரனி சோசை அடிகளார் ஆகியோர் இவ் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் இக் காணி தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.

பரிபாலகர்கள் காணியற்றவர்களுக்கு குத்தகைக்கு கொடுத்து காலாகாலம் குத்தகை பெறப்பட்டு வந்த விவசாய காணி தொடர்பாக அன்மைகாலமாக மடு நிர்வாக அர்பணியாளர்களுக்கும் குத்தகைக்காக பெறப்பட்ட விவசாயிகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாகவே விளக்கம் அளிப்பதற்கு இவ் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்ததாவது
நாங்கள் இந்த ஊடக சந்திப்பை ஏற்படுத்தியதுக்கு காரணம், மன்னார் மறை மாவட்டத்திலுள்ள மருதமடு அன்னையின் திருத்தளத்தில் அமைந்துள்ள கோவில்மோட்டைக் காணி தொடர்பாக சென்ற வாரம் தொடக்கம் வெவ்வேறு கருத்துக்கள் வெளிவந்த விதமாக காணப்படுகின்றன.
நாங்கள் இவ் விவசாய காணி தொடர்பாக கடந்த நாட்களில் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் இன்று அனைத்து மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவ் ஊடக சந்திப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
இப் பிரச்சனைக்குரிய காணியின் உண்மை வரலாற்றை அனைவருக்கும் எடுத்துக் கூறவும் தற்பொழுது இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் தவறான செய்திகள், கொள்கைகளை அகற்றும் முயற்சியாகவே இவ் ஊடக சந்திப்பு அமைகின்றது.
ஒரு திருத்தளத்துக்கு காணி சொத்து இருக்குமாகில் அதனால் பங்கு தந்தையர்கள் பிரயோசனம் அடைவதில்லை. மாறாக, அது திருத்தளத்துக்கும், அத் திருத்தளத்தினூடாக எத்தனையோ நன்மைகளை மற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவி புரியவும் இவ்வாறான நன்மை காரியங்களை செய்வதற்காகவே அவைகள் அமைகின்றன.
தற்பொழுது இப் பிரச்சனைக்குரிய காணியானது சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக இவ் ஆலய பரிபாலகர்களாக இருந்தவர்கள் பிரயோசனமான தன்மையில் பராமரித்து வந்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து இக் காணியை பராமரித்து வந்த அருட்பணியாளர்கள் இங்கு இருக்கின்றனர். இது தொடர்பாக இவர்களும் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு தெளிவுபடுத்த இருக்கின்றனர்.
ஆகவே இந்த கோவில்மோட்டை காணி தொடர்பாக தவறான கருத்துக்கள் கொள்கைகள் நிலவும் இவ்வேளையில் இவற்றை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் மன்னார் ஆயர்.

இதைத் தொடர்ந்து மடு ஆலய பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார், முன்னாள் மடு பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் மற்றும் மறைமாவட்ட காணிகளுக்கு பொறுப்பாளர் அருட்பனி இ.அன்ரனி சோசை அடிகளார் ஆகியோர் ஆலய வரலாறுகள், இக் காணியின் வரலாறுகள் இவற்றை பராமரித்த விடயங்களை ஊடகங்களுக்கு ஒவ்வொருவராக தெளிவுபடுத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தொடர்ந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
இக் கோவில்மோட்டைக் காணியை மருதமடு திருத்தளத்துக்கு அரசாங்கம், அரசு உத்தியோகத்தர்களால் வழங்கி வந்துள்ளது பதிவுகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் உண்மை மூடப்பட்டதும் அல்ல; நாங்கள் நிர்மானித்தவையும் அல்ல. உங்களுக்கு காண்பிக்கப்பட்டதுக்கு அமைவாக இவைகள் மிக தெளிவாக காணப்படுகின்றது.
நாங்கள் இப்பொழுது வேண்டுவது உண்மையை அறிந்து நீதி கிடைக்கப்பெற வேண்டும். இந்த கோவில்மோட்டை வயல் காணியின் மூலம் மருதமடு அன்னைக்கு வழங்கப்பட்ட வருமானம் இந்த திருத்தளத்தின் அபிவிருத்திக்காகவும் ஏழைகளுக்கு உதவிபுரியும் தன்மையில் அமைய வேண்டும் என்பதே எமது தாழ்மையான கருத்து.
ஆனால் இன்று பொய் பிரச்சாரங்கள், அதுவும் மடு அருட்தந்தையர்களிடமிருந்து தாங்கள் ஐம்பது ஏக்கர் காணியை பறித்து விட்டோம் என்று சொல்லுவதில் சிலர் விளைந்து கொண்டு இருக்கின்றார்கள். இதை நாங்கள் தன்மையாக கண்டிக்கின்றோம்.
எங்களுக்கு இக் காணி தொடர்பாக ஒழுங்கான தீர்வு வட மாகாணத்தால் கிடைத்திருந்தால் நாங்கள் மத்திய அரசின் காணி ஆணையாரை நாடியிருந்திருக்க மாட்டோம்.
தேசிய யாத்திரிகர் தளமான மருதமடு அன்னையின் பகுதியை பாதுகாக்கும் நோக்குடனே எமது இந்த முயற்சி தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாங்கள் காணி ஆணையாளர் நாயகத்திடம் சென்றிருந்தபொழுது அவர் இவ்விடத்துக்கு வந்து இவ் வருடம் ஆலயத்தால் வழமையாக செய்யப்படும் விவசாயத்தை அதாவது ஐந்து ஏக்கரிலும் தொடர்ந்து மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டதுகிணங்க நாங்கள் அவற்றை முன்னெடுத்தோம்.
ஆனால் எமது மடு பரிபாலகர் உதவி பங்கு தந்தையர் மற்றும் இதன் பணியாளர்கள் விசாயத்தை மேற்கொள்ள முயன்றபோது பலர் தடைகள் போட்டு இவர்களை அச்சுறுத்தி வந்துள்ளனர், வருகின்றனர்.
நாம் ஒன்றுபட்டு வாழும்போதுதான் அமைதியாக வாழலாம். சமாதானத்துடன் சகோதரத்துவத்துடன் வாழலாம். நாங்கள் விவசாயிகளுக்கு எதிராக செயல்படவில்லை.
மன்னார் மறைமாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகளே இருக்கின்றார்கள். இவர்களுடன்தான் நாங்களும் வாழ்கின்றோம். அவர்களுக்குத்தான் நாங்கள் பணி புரிகின்றோம்.
இதனால் நாங்கள் ஒருபோதும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படவில்லை. செயல்படவும் மாட்டோம். ஆனால் எங்களுக்கு இருக்கும் பொறுப்புகளுக்கு அமைவாக இந்த காணியை திருத்தளத்துக்கு உரிய விதத்தில் பாதுகாக்க வேண்டும். இதற்கு எங்கள் பாரிய பொறுப்பு உண்டு.
இன்றைய நிலையை நோக்கும்போது விவசாயிகளுக்கும் மடு கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதலை உருவாக்குவதற்கு வேறு மதத் தலைவர்களை அழைத்து வருவது அநியாயத்துக்குரியது.
தமிழ் மக்களுக்கிடையே நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு வேறு மொழி பேசுவோரையும் வேறு மதத்தைச் சார்ந்தவர்களையும் ஏன் இங்கு அழைத்துவரப்பட வேண்டும் என்பதே எனது கேள்வியாக அமைகின்றது.
நாம் தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும். எம்மில் அமைதியை கொண்டு செல்ல வேண்டும். மதங்களுக்கிடையே அமைதி ஒற்றுமை இருக்க வேண்டும்.
அதைவிடுத்து வேறுபட்டவர்களை அழைத்துவந்தபோது எங்களிடம் எதுவும் தொடர்பு கொள்ளாது தீர்ப்பதற்கு வருகை தந்தார்கள் என்றால் இது அநிநாயத்தை கொண்டுவரப் போகின்றது.
எமது மன்னார் மறைமாவட்டத்தின் பாதுகாவளியாம் புதுமைநிறை மருதமடு அன்னையிடம் நாங்கள் இப் பிரச்சனையை விட்டுவிட்டோம் அவள் ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் இருப்பதால் அவள் சரியானதை செய்வாள் என்ற விசுவாசத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்றார்.

வாஸ் கூஞ்ஞ