
posted 7th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிரித்தானியாவின் புதிய பிரதமர் தமிழீழ கனவை நனவாக்குவார் - சிங்கள வார இதழின் அச்சம் இது
பிரித்தானியாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் தொழில் கட்சியின் புதிய பிரதமரான கியர் ஸ்ராமர் இலங்கையை பிளவுபடுத்தி ஈழக்கனவை நனவாக்கி விடுவார் என்று சிங்கள வார இதழ் ஒன்று அச்சம் வெளியிட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை (06) வெளியான அந்த வார இதழின் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு,
பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்ற தொழில் கட்சி அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கை இலங்கைக்கு மிகவும் மோசமானதாக அமையும் என்ற பெரும் அச்சம் இங்குள்ள இலங்கையர்கள் இடையே உள்ளது. புலம்பெயர் புலிகளின் அப்பட்டமான பொய்களுக்கு ஏமாந்து இலங்கைக்கு எதிரான அரசியல்வாதியாக தொழில் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பினும் புதிய பிரதமரும் மாறியதே இதற்கு காரணம்.
இலங்கையின் வடக்கில் தமிழீழ அரசை அமைப்பதற்கான போராட்டத்துக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கடந்த காலங்களில் பல அறிக்கைகளை வெளியிட்டார். புலம்பெயர் தமிழர்களின் அழைப்பின்பேரில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொழிலாளர் தலைவர் வெளியிட்ட காணொலியில், இலங்கை போரின் இறுதிப் பகுதியில் கொடூரமாகக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாங்கள் மரியாதையுடன் நினைவு கூருகிறோம். தொழிலாளர் கட்சி எப்போதும் தமிழ் மக்களுடன் உள்ளது. இந்த நேரத்தில் நாம் அவர்களை மரியாதையுடன் நினைவு கூர்வதுடன் உண்மையை அறிந்து பொறுப்புக்கூறலை நாட வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த மனித உரிமைகளை மீறிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று தொழிலாளர் கட்சியாக மீண்டும் உறுதியளிக்கிறோம். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையைப் பின்பற்றி, தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து இந்த கொலையாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு பிரித்தானிய அரசை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.
இதேபோன்று, தைப்பொங்கல் செய்தியில், “இலங்கையில் சுயநிர்ணயம், சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் செய்த தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இதுவாகும். இலங்கை அரசாங்கம் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான தனது ஆதரவை மேலும் தாமதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் தெளிவான பொறுப்பில் செயல்படுமாறு தொழிற்கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது.
கடந்த ஆறு வாரங்களாக புலம்பெயர் தமிழர்கள் இரவு-பகலாக வீடு வீடாகச் சென்று தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு வந்திருக்கின்றனர். கடந்த வாரம் லண்டன் நீதிமன்றம், விடுதலை புலிகள் மீதான பிரித்தானியாவின் தற்போதைய தடையை நீக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் அவநம்பிக்கையான முயற்சியை, முன்னைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் வழக்கறிஞர்கள் வெற்றிகரமாக வாதிட்டதையடுத்து, கடந்த வாரம் தூக்கி எறிந்தனர். ஆனால், இன்று ஆட்சிக்கு வந்துள்ள தொழில் கட்சி சில மாதங்களிலேயே இந்த தடையை மனமுவந்து நீக்கி தமிழீழத்துக்கான பாதையை திறந்து விடும் என்று இங்குள்ள பல இலங்கையர்கள் கூறுகின்றனர்.
தொழில் கட்சி அரசின் உதவியால் தமிழீழ கனவை 10 ஆண்டுகளில் நிறைவேற்றி விடலாம் என்று விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் நினைக்கின்றனர். எனவே, தொழில் கட்சி அரசாங்கத்தின் கீழ் லண்டனில் என்ன நடக்கிறது என்பது குறித்து இலங்கை அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)