
posted 21st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஆதிவாசிகள்
(எஸ் தில்லைநாதன்)
வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு இன்று (21) சனிக்கிழமை விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான 60 பேரைக் கொண்ட ஆதிவாசிகள் குழுவினரே இன்றும், நாளையும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டுவிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு அவர்கள் செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
(எஸ் நில்லைநாதன்)
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கைக்காக 200 மில்லியன் ரூபாய் வரையில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணத்திற்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை குறிப்பிட்டார்.

வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு
(ஏ.எல்.எம்.சலீம்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள 13 பிரதேச வைத்தியசாலைகளினதும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு அந்த வைத்தியசாலைகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராக்கள் வலையமைப்பின் ஊடாக பிராந்திய பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த வலையமைப்பினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எம். முஜீப் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் குறித்த நிகழ்வில் முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் எம்.பீ. அப்துல் வாஜித், பிரிவுத் தலைவர்கள், கணக்காளர் உள்ளிட்ட பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவில் உயிரிழந்து கரையொதுங்கியது சுறா!
(எஸ் தில்லைநாதன்)
முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சுறா ஒன்று இன்று (21) சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் 15 அடி நீளமுடைய சுறா ஒன்றே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இலங்கைக் கடற்கரையில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின், கடலாமைகள் மற்றும் ஏனைய கடல்வாழ் உயிரினங்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் பகுப்பாய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகள் மேம்பாடு கருத்துரை நிகழ்வு
(எஸ் தில்லைநாதன்)
வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகள் மேம்பாடு தொடர்பிலான கருத்துரை நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இல - 54, மணிக்கூட்டுக்கோபுர வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது.
வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் தலைவர் கே. பூரணச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் "வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகள் மேம்பாடு" என்கிற தலைப்பில் சமூக பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின் இரேனியஸ் கருத்துரை வழங்கினார்.
வடக்கின் சிறிய, நடுத்தரக் கைத்தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் துணைத் தலைவர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன், ஆறுதல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெயமுருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் எமது முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூட்டாக எதிர்கொள்வது தொடர்பிலும், தொழில் முயற்சியோடு தொடர்புடைய பல்வேறு அரச, தனியார் துறை வல்லுனர்களையும் எதிர்காலத்தில் அழைத்து உரையாடல் நடாத்துவது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இப்படியான வர்த்தக மேம்பாடு ஆலோசனைகள் அதனூடாக துறைசார் அனுபவங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் தங்களது தொழில் முயற்சிகளை மேலும் விரிவாக்கி கொள்ள உதவிக்கரமாக இருக்கும் என இந்நிகழ்வில் பங்கேற்ற முயற்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)