
posted 18th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நோன்பிற்கு விசுவாசம் உள்ளவர்களாக இஸ்லாமிய மக்கள் இருப்பது ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டு - மன்னார் ஆயர்
நோன்பு காலத்தில் தங்கள் உமிழ்நீரைக் கூட விழுங்காது நோன்பிற்கு விசுவாசம் உள்ளவர்களாக இஸ்லாமிய மக்கள் இருப்பது ஒவ்வொருவருக்கும் அது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது என மன்னார் புதுக்குடியிருப்பு முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினால் திங்கள் கிழமை (17) மாலை இப்தார் நிகழ்வு நடாத்தப்பட்ட போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
மேலும் ஆயர் தெரிவித்ததாவது;
இஸ்லாமிய மக்கள் நோன்பு காலத்தில் அனுஷ்டிக்கப்படும் இன்றைய இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ளும் எனக்கு இதுவே முதல் அனுபவமாக இருக்கின்றது.
கடந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு பிரச்சினைகள் காரணமாக குறிப்பாக கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தமையால் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுவதற்கு கடினமாக இருந்திருக்கின்றது.
அத்துடன் மக்கள் ஒன்று கூடுவதும் அக்காலத்தில் இருந்துள்ளன. ஆனால், இன்று இந்த இப்தார் நிகழ்வுக்கு வெவ்வேறு மதத் தலைவர்களையும் அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பணிபுரியும் முக்கிய தலைவர்களையும் அழைத்து ஒரு நல்லிண நோக்குடன் இந் நிகழ்வை நடாத்துவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த காலத்தில் இஸ்லாமியர்களாகிய நீங்கள் நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றீர்கள். உங்கள் உமிழ் நீரைக்கூட விழுங்காது நீங்கள் அனுஷ்டிக்கும் நோன்பிற்கு ஒரு விசுவாசம் உள்ளவர்களாக இருக்கின்றீர்கள்.
இஸ்லாம் மதத்தை தழுவி வாழும் மக்களாகிய உங்களை நாங்கள் வாழ்த்தி நிற்கின்றோம். இது எங்களுக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றது.
றம்ழான் பெருவிழாவுக்குத் தயாராகிவரும் நீங்கள் இவ்வாறான ஒன்று கூடல் நிகழ்வை நடாத்தியமைக்கு நான் உங்களுக்கு நன்றியையும் நவிழ்ந்து நிற்கின்றேன்.
இந்த மாலை வேளையில் ஒன்று கூடியுள்ள தருணத்தில் அல்லாவின் ஆசீர் உங்கள் சமூகத்திற்கு நிறைவாக கிடைக்கப்பெறவும் நீங்கள் மகிழ்ச்சியிலும், அமைதியிலும் வாழ வேண்டி நிற்கின்றேன் என மன்னார் ஆயர் தனது ஆசீயுரையில் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)