
posted 20th May 2022
முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டி இருந்தால் ராஜபக்கக்கள் அறத்தின் வழி நடந்து ஒரு தர்மத்தின் வழியிலான ஒரு அரசியலை நடத்தி இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி கண்டாவளை கொம்படி அம்மன் ஆலயத்தின் புகழ்பாடும் கொம்படியம்மன் சிலம்போசை என்ற பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
மதுரையில் பாண்டிய மன்னன் ஆட்சி செய்தபோது கண்ணகி தன்னுடைய கணவன் கோவலனுக்காக மன்னவனிடம் சென்று நீதி கேட்டாள். "மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?" என்று தன்னுடைய காற்சிலம்பை எறிந்துடைத்து உண்மையை வெளிக்கொண்டு வந்து, மன்னவன் தனது கணவனுக்கு வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்பு பிழையானதென்று நீதியை நிலைநாட்டியது கண்ணகியின் போராட்டத்தால் தான்.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்." இதனையும் சிலப்பதிகாரம் தான் சொல்லுகின்ற கண்ணகியின் வார்த்தைதான். யார் அரசியலில் இருக்கின்றார்களோ, அவர்கள் பிழையான ஒரு அரசியலை செய்தால், அவரது வாழ்க்கையில் அவரைத் தண்டிக்கும்.
அது நானாக இருக்கலாம் அல்லது மதுரை மன்னனாக இருக்கலாம் இந்த நாட்டில் அரசியல் செய்யும் யாராக இருந்தாலும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். இதை இன்றைய நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முதல் மகிந்த ராஜபக்ச, ஏன் ராஜபக்ஷ குடும்பத்திற்கே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாக அவர்களுக்கு அது மாறி இருக்கின்றது.
இதனால் இன்று அவர்கள் எங்கே ஓடி ஒழிப்பது? எங்கே தங்குவது? என்று தெரியாமல் ஓடி அலைந்து திரிகின்றார்கள். இந்த நாட்களை நாங்கள் பார்க்கின்றோம்.
உண்மையைக் கண்டறிந்து கண்ணகி நீதியை நிலைநாட்டி எல்லோருக்கும் ஒரு நீதி தேவதை ஆக வைத்து போற்றப்படுகின்றாள் பத்தினி தெய்வமாக வழிபடப்படுகிறார்.
அது போல, ராஜபக்சக்கள் இந்த முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டி இருந்தால், அவர்கள் அவர்களது அரசியல் பிழைக்காமல் அறத்தின் வழி நடந்து ஒரு தர்மத்தின் வழியிலான ஒரு அரசியலை நடத்தி இருக்கலாம்.
ஆனால் அந்த தர்மமும், நீதியும், கருணையையும், அன்பையும் போதிக்கின்ற புத்த பகவானுடைய மகாவம்ச சிந்தனையில் ஊறித்திளைத்து இருக்கின்ற ராஜபக்ச குடும்பத்தை அல்லது சிங்கள மக்களும் அதிலிருந்து விடுவதில்லை. அதிலிருந்து அவர்கள் இன்னும் மீள முடியாதவர்களாக இருக்கின்றார்கள் அதனால்தான் இந்த நாடு இவ்வளவு சீரழிகின்றது.
இவர்கள் உண்மையை உணர்ந்து கொண்டால், சரியான வழியில் இந்த அரசாங்கம் நடந்து கொண்டால், இந்த பொருளாதாரத்தை மிக இலகுவாக நிமித்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை கொம்படி அம்மன் ஆலயத்தின் புகழ்பாடும் கொப்படியம்மன் சிலம்போசை என்ற பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா இன்று (20-05-2022) நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பழம்பெரும் கிராமமான கண்டாவளை பிரதேசத்தில் வரலாற்றுத்தொன்மை கொண்டு அற்புதங்கள் பல நிறைந்த கொப்படியம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் கொப்படியம்மன் சிலம்போசை என்ற பாடல் இறுவட்டு இன்று பகல் 10 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.
குறித்த வெளியீட்டு விழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பாடல் இறுவெட்டை வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து பாடல் இறுவெட்டின் வெளியிட்டுக்காக உழைத்த கலைஞர்கள், பாடகர்கள் கௌரவிக்கப்பட்டனர் குறித்த நிகழ்வில் பெருந்திரளான அம்மன் பக்தர்கள் கலை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY