
posted 17th August 2021

நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல். அன்றேல் அனுமதி பத்திரம் இரத்தாகும் - அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்
மன்னார் மாவட்டத்தில் நிர்நிணயக்கப்பட்ட விலைக்கு மண் வழங்காவிடில் அவர்களின் மண் அகழ்விற்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும்.என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (16) மண் அகழ்வில் ஈடுபடுபவர்களுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதை தொடர்ந்து அரசாங்க அதிபர் இது விடயமாக தெரிவிக்கையில்; மன்னார் மாவட்டத்தில் மண் அகழ்வு தொடர்பாகவும் விலைகள் தொடர்பாகவும் மக்களிடமிருந்து முறைப்பாடுகள் தொடர்சசியாக வந்தவண்ணம் காணப்பட்டது.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை சார் திணைக்களங்களுடன் இணைந்து கள விஜயத்தை மேற்கொண்டு சில இடங்களில் மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதை நிறுத்தியுள்ளோம்.
அத்துடன் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வுக்கு அமைவாக அவர்களால் வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலும் நாங்கள் தற்போது மன்னார் மாவட்டத்தில் 46 அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளோம். இந்த அனுமதிப்பத்திரங்கள் இலுப்பைக்கடவை,கூராய், அருவியாறு, பெரியமடு, முசலி போன்ற இடங்களில் மணல் அகழ்வு செய்ய வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் ஊடாக தேவைப்படும் மக்களுக்கு நியாய விலையில் மண் வழங்கப்பட வேண்டும் என்பதை அறியப்படுத்தியும் உள்ளோம்.
இதன் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இடங்களுக்கு ஒரு டிப்பர் மணல் 29 ஆயிரம் ரூபாவிற்கும், மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 30 ஆயிரம் ரூபாவிற்கும், தலைமன்னார் பிரதேசத்திற்கு 34 ஆயிரம் ரூபாவிற்கும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 32 ஆயிரம் ரூபாவிற்கும் மணல் விற்பனை செய்யப்பட வேண்டும் என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை உரிய முறையில் அமுல் படுத்த கிராம அலுவலகர்களுக்கு பிரதேச செயலாளர்களின் ஊடாக தெரியப்படுத்துவதுடன் மணல் அகழ்வு செய்பவர்களின் விபரங்களையும் வழங்கவுள்ளோம். அமுல் படுத்தப்பட்ட விலையை உறுதி படுத்தி மணல் வினியோகிக்க வேண்டும்.
அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படும் போது தீர்மானிக்கப்பட்ட விலைக்கு மணல் வினியோகித்தார்களா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு, அனுமதிப்பத்திரம் மீண்டும் புதிப்பிப்பது தொடர்பாக ஆராயப்படும்.
மணல் அதிக விலைக்கு விற்பனை செய்தால் அல்லது சேவை இடம் பெறாதிருந்தால் உடனடியாக அவர்களின் விபரங்கள் எங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்களின் அனுமதிப்பத்திரமும் ரத்துச் செய்யப்படும். மக்களின் அவசிய தேவைகளையும்,அபிவிருத்தி பணிகளையும் கருத்தில் கொண்டு குறித்த மண் அமுல் படுத்தப்பட்ட விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ