
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதியின் உத்தரவின்பேரில் 22ஆம் திருத்த சட்டமூலம் வர்த்தமானி வெளியானது
அரசமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியானது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை 22ஆவது திருத்த சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட வேண்டாம் என்று தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசமைப்பின் ஏற்பாட்டில் காணப்படும் குறைபாட்டை திருத்தும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. அரசமைப்பின் 83ஆம் உறுப்புரையானது, அதன் (ஆ) எனும் பந்தியில் 6 ஆண்டுகளுக்கு மேற்பட்ட என்னும் சொற்பதத்துக்கு பதிலாக ஐந்து ஆண்டுகள் எனும் சொற்பதத்தை சேர்க்கும் வகையில் இந்தத் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்படின் சிங்கள உரையே மேலோங்கியதாகக் கருதப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கும் அல்லது தேர்தல் பணிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினரும், சிவில் அமைப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிபபடுத்தியுள்ளனர்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22ஆவது திருத்த வரைவை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதுடன் சர்வசன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்துடன் தொடர்புடைய ஒரு விடயத்துக்கு சர்வசன வாக்கெடுப்பு கோரும்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இதேநேரம், 22ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் வாரம் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் இலங்கை குடிமக்கள் எவரும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)