
posted 29th September 2021

செல்வம் அடைக்கலநாதன் M P
சுகாதார சேவைகள் பணியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது. நாடு முழுவதும் உள்ள இவர்கள் தங்களுடைய மேலதிக நேர கொடுப்பனவுகளை கோரி பல மாதங்களாக கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு காதாரத்துறை அமைச்சர் முன்வர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வேண்டுகொள் விடுத்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நமது நாட்டில் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டதில் இருந்து சுகாதார பணியாளர்களின் பணி இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.
நோயாளர்களுக்கு அருகில் செல்ல உறவுகள் அச்சப்படும் நேரத்தில் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதோடு அவர்களுக்கு அருகில் இருந்து பராமரித்து அவர்களது நோயை குணப்படுத்தி அவர்களுடைய குடும்பங்களோடு இணைத்து விடுவதில் இவர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள்.
இவர்கள் தங்களுடைய குடும்பங்களைக் கூட கவனிக்காமல் நோயாளர்களுக்கே முன்னுரிமை கொடுத்து சேவை செய்யும் இப் பணியாளர்கள் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டியவர்கள். எனவே சுகாதாரத் தொண்டர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை அரசாங்கம் ஒருபோதும் மறுக்கக் கூடாது. நீண்டகாலமாக இவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் வீதியில் நின்று போராட வைப்பது அரசாங்கத்துக்கும், உரிய அமைச்சுக்கும் அழகல்ல.
எனவே சுகாதாரத் தொண்டர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை அவர்களுக்கு வெகு விரைவில் வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்