
posted 29th September 2021
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு பகிர்வு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் கணக்கும் ஒரு மாத காலத்துக்கும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்திலும், உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தப்பட்டது. இதையொட்டி வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரான சீ. வீ. கே. சிவஞானம் திலீபனுடனான தனது நினைவுகளையும், அவரின் பங்களிப்புடனும் 1988ஆம் ஆண்டு கட்டப்பட்ட நினைவுத் தூபி, 1995 ஆம் ஆண்டு அந்தத் தூபி இடிக்கப்பட்ட பின்னர் 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இரண்டாவது தூபி குறித்தும் அதில் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பதிவிட்டிருந்தார் அந்தப் பதிவு ஒரு சில மணி நேரத்திலேயே நீக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து இரவு 8.45 மணியளவில் மீண்டும் அதே பதிவை பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரின் பேஸ்புக் கணக்கை 30 நாட்களுக்கு பேஸ்புக் நிறுவனம் கட்டுப்படுத்தியுள்ளது.
இதேவேளை, தியாகி திலீபன் குறித்த பதிவுகளை வெளியிட்ட வேறு சிலரின் பேஸ்புக் பயனர்களின் கணக்குகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று அறியவருகின்றது.

எஸ் தில்லைநாதன்