
posted 20th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறப்பாக நடந்த தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வேட்டை திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் 13ஆம் நாளான நேற்று முன்தினம் (18) வியாழன் திருவேட்டைத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிற்பகல் ஆலயத்தின் மூல மூர்த்தியாக அமர்ந்துள்ள சுயம்புலிங்கப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்றன. தொடர்ந்து இறைவன் வேகாவனேஸ்வரர் பக்தர்கள் புடைசூழா வேட்டைத் திருவிழாவுக்கு புறப்பட்டார்.
பாரம்பரியமாக தொன்றுதொட்டு வேட்டைத்திருவிழா நடைபெறும் வயல்வெளியில், பெருந்திராளான வேடுவர்கள் புடைசூழ வேகாவனேஸ்வரருக்கு பாரம்பரிய முறையிலான பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் நோக்கில் பெருந்திரளான பக்தர்கள் வாகைமரக் குலைகளால் உடையும், தொப்பியும் அணிந்து, உடல் முழுவதும் கரிபூசி வேடர்கள் போல கோலம்பூண்டு தடிநுனி ஒன்றில் வாகைகுழையை கட்டி அதனைக் கையில் வைத்துக்கொண்டு வேட்டைத் திருவிழாவில் பங்கேற்றிருந்தனர்.
இந் நிலையில் இறைவன் வேகாவனேஸ்வரர் பெரிய வேடனாக அமர்ந்து பவனிவர, வேகாவனேஸ்வரரை சுமந்தும், அவரைச் சூழ ஆயிரக்கணக்கான வேடுவ படையணியினரும், பக்தர்களும் இந்த பவனியில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு வீதி வலம் வந்து இறைவன் வேகாவனேஸ்வரர் கோயில் வாயிலை அடைந்ததும், கோயிலின் இறைவி சுவாமியுடன் கோபித்துக் கொண்டு வாயில் கதவைப் பூட்டிக்கொள்வார். அவ்வேளையில் கோயில் மணியகாரர் அவர்களுடைய பிணக்கை விசாரித்துத் தீர்த்து வைக்கும் பாங்கிலான நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது.
இதனையடுத்து கோவில் வாயில் கதவு திறந்ததும் இறைவன் வேகாவனேஸ்வரர், இறைவி பூலோகநாயகி சமேதராக பக்தர்கள் புடைசூழ உள்வீதி வலம்வந்தனர்.
தொடர்ந்து மூலமூர்த்தியான சுயம்புலிங்க பெருமானுக்கு விசேட பூசைகளும், அர்ச்சனைகளும் நடைபெற்றன.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)