
posted 2nd September 2022
தமிழ் மக்களின் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தும் முகமாக வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தமது சாத்வீகமாகன, ஜனநாயகமான நூறுநாட்கள் செயல்முனைவின் விழப்புணர்வு போராட்டம் ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பித்து வெள்ளிக் கிழமை (02.09.2022) 33 வது நாளை எட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் நடைபெறும் நூறு நாட்கள் இச் செயல் முனைவானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரனையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் (போரம்) மற்றும் 'மெசிடோ' நிறுவனங்களின் ஏற்பாட்டில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இச் செயல்முனைவின் 33 வது நாள் மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவில் சிலாவத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை (02.09.2022) காலை 10 மணியளவில் புதிய பஸ் நிலையத்தில் முசலி பிரதேசப் பகுதியிலிருந்து நாலா பக்கங்களிலிருந்தும் வந்த மக்கள் தங்கள் உரிமைகளுக்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஒன்றுகூடிய போது அவர்களுக்கு இந்த 100 நாட்கள் செயல் முனைவு பற்றிய விளக்கவுரையும் அளிக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் போது;
'ஒன்று கூடுவது எமதுரிமை'
'கருத்துச் சுதந்திரம் எமது உரிமை'
'கௌரவ உரிமையுடன் அரசியல் தீர்வு வேண்டும்'
போன்ற வாசகங்களுடன் பதாதைகளை ஆண்கள் பெண்கள் இரு பாலாரும் தாங்கியவர்களாக இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரலாக இச் செயல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கான விளக்கவுரையை மன்னாரில் சிறந்த சட்டத்தரனியாக விளங்கும் சட்டத்தரனி செல்வராஜ் டினேஷ் மற்றும் மெசிடோ நிறுவன மன்னார் பணிப்பாளர் யட்சன் பிகிராடோ ஆகியோர் நிகழ்த்தியதுடன் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரலாக மக்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)