
posted 6th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
குழந்தைக்கு தாய்ப்பாலை தவிர்த்து பால்மா கொடுப்பது விஷத்துக்கு சமம்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து பால்மா வகைகளை கொடுப்பது பெற்ற குழந்தைக்கு விஷத்தை கொடுக்கும் செயல்பாட்டுக்கு சமம் என்று சாய்ந்தமருது பிரதேச மருத்துவமனை மருத்துவர் சனூஸ் காரியப்பர் தெரிவித்தார்.
சர்வதேச தாய்ப்பால் தினம் சாய்ந்தமருது பிரதேச மருத்துவமனையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
குழந்தைகளின் தேக ஆரோக்கியத்துக்குத் தேவையான தாய்ப்பாலினை கொடுப்பதனை தவிர்த்து, ஏனைய பால்மா வகைகளை கொடுத்திடும் செயல்பாடு தாம் பெற்ற குழந்தைக்கு விஷத்தை கொடுத்திடும் செயல்பாட்டுக்கு சமமானதாகும்.
சர்வதேச ரீதியில் தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் தாய்ப்பாலுக்கு சர்வதேச ரீதியில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பதனை இந்த சர்வதேச தினம் சுட்டிக்காட்டுகின்றது.
ஒரு தாய் பாலூட்டல் மூலம் 42 சதவீதமான மார்பக புற்று நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஒரு தாயினால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அந்த குழந்தைக்கு மட்டும் நன்மை கிட்டுவதில்லை. தாய்க்கும் பல்வேறு வழிகளில் நன்மை கிடைக்கின்றது. பிறந்த குழந்தையொன்று தொடர்ச்சியாக அதன் ஆறு மாத காலத்துக்கும் தாய்ப்பாலை மட்டும் உட்கொள்ளும் போது ஆறு மாத காலத்துக்குப் பிற்பாடு இரண்டு வருட காலத்துக்குள் ஏனைய உணவுகளுடன் தாய்ப்பாலையும் சேர்த்து கொடுக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தையானது அதிகளவு நோய் எதிர்ப்பு சக்திகளைப் பெறுவதோடு புரதம் உட்பட பல்வேறு சத்துக்கள் குழந்தைக்கு கிடைக்கின்றன..
இவ்வாறு தாய்ப்பாலூட்டத்தால் வளரும் குழந்தை எதிர்காலத்தில் பூரண ஆரோக்கியமான பிரஜையாக தோற்றம் பெறும். அது மட்டுமல்லாது வயதான காலங்களில் ஏற்படும் எலும்பு முறிவு, எலும்பு தேய்வு போன்றவை ஏற்படாமல் இருப்பதற்கும் தாய்ப்பாலூட்டல் மிகவும் அவசியமாகும்.
சந்தைகளில் காணப்படும் பால்மாவினை தவிர்த்து தாய்ப்பாலினை ஒரு குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)