
posted 27th January 2023
கடந்த காலங்களிலே ஜனாதிபதியால் வாக்குறுதி அளித்த விடயங்களான நில அபகரிப்பு மற்றும் சிறைக் கைதிகளின் விடுதலை போன்ற பல விடயங்களை அரசாங்கம் சரியாக நடைமுறைப்படுத்தாத காரணத்தால் வியாழக்கிழமை (26) நாங்கள் சர்வ கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை (26) இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்;
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக வியாழக்கிழமை (26) ஜனாதிபதி தலைமையில்
நடைபெறுகின்ற சர்வ கட்சி கூட்டத்தில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அண்ணனும் கலந்து கொள்ளவில்லை.
அதற்கான காரணம் கடந்த காலங்களிலே ஜனாதிபதியால் வாக்குறுதிகள் அரசாங்கம் சரியாக நடைமுறைப்படுத்தாத காரணத்தாலேயே நாங்கள் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை..
நாங்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்ட விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை வைக்கின்றோம்.
தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் கேட்ட விடயங்கள் நிறைவேற்றப்படுமாகில் இனிவரும் ஏனைய கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம்..
இது தொடர்பாக நாங்கள் ஜனாதிபதி அவர்களை நேரில் சந்தித்து கூற இருக்கின்றோம்..
ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் வன மற்றும் திணைக்களம்கள் தங்களுடைய செயற்பாடுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறன.
எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நில அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே கடந்த பொங்கல் தினத்தில் யாழ் பகுதிக்கு வந்த ஜனாதிபதி வாக்களித்த பொதுமக்களின் 108 ஏக்கர் காணி இன்னமும் விடுபடவில்லை
ஆகவே இதை எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து முன் வைக்கின்றோம்..
எனவே நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை அவை சாத்தியமாக இருந்தால் அடுத்தடுத்த கூட்டங்களில் கலந்து கொள்வோம் என்றார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)