
posted 23rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு - பொலிஸார், படையினர் விசாரணை
காத்தான்குடியில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீட்டுக்கு அண்மையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட நிலையில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீட்டுக்கு அண்மையில் உள்ள வடிகானில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (21) இரவு காணப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி, பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஆ பள்ளி வீதியில் வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகானுக்கு அருகில் கைக்குண்டு ஒன்று கிடப்பதை அவதானித்த பொது மக்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று குறித்த கைக்குண்டை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்ததுடன் விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று (22) திங்கட்கிழமை காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்ட இடத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் பொலிஸார், படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை, கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டுக்கு அண்மையிலுள்ள வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதோரால் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)