
posted 1st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கழுத்து நெரிக்கப்பட்டு இளைஞன் படுகொலை
முல்லைத்தீவில் குளத்திலிருந்து செவ்வாய் (30) அன்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மல்லாவி - யோகபுரத்திலிருந்து பாண்டியன்குளத்துக்கு 20 இலட்சம் ரூபாயுடன் ஆனந்தராசா ஜீவன் என்பவர் சென்றிருந்தார். அவருடனான, தொடர்பு இரவு 8.40 மணியுடன் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் நண்பர்களும், உறவினர்களும் அவரை தேடிச் சென்றனர்.
செவ்வாய் (30) அன்று அதிகாலை வவுனிக்குளத்தில் அவரின் மோட்டார் சைக்கிளும் உடலும் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சடலம் கிடந்த இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். எச். மக்ரூஸ் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவரின் சடலம் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன் தினம் (31) சட்ட மருத்துவ அதிகாரி க. வாசுதேவா பிரேத பரிசோதனையை நடத்தினார். கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம் சம்பவித்ததாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
பணத்துக்காகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிவித்த நட்டாங்கண்டல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவுக்கு செல்வதற்காக குறித்த இளைஞர் அந்தப் பணத்தை கொண்டு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)