
posted 1st January 2023

2023 புதுவருடத்தில் கடமைப்பொறுப்பேற்கும் சத்தியப் பிரமாண நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை 02.01.2023 நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.
வருடாந்தம் புதுவருடம் பிறந்த முதல் நாள் அரச ஊழியர்கள் இவ்வாறு கடமை தொடர்பான உறுதியுரையுடன், கடமைகளைத் தொடர்வது வழக்கமாகும்.
முதல் நாளான இன்று ஞாயிறு விடுமுறை தினமாதலால் நாளை 2ஆம் திகதி குறித்த கடமைப் பொறுப்பேற்கும் விசேட சத்தியப் பிரமாண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்படி நாட்டிலுள்ள அரச திணைக்களங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்களிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
உரிய திணைக்களங்கள், அலுவலகங்களின் தலைவர்கள் தலைமையில் ஒன்றுகூடும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது புது வருட கடமைகளை ஆரம்பிப்பதற்கான சத்தியப் பிரமாணத்தை செய்து, கடமைகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அரசாங்கத்தின் தீர்மானத்தினால் 31,000 அரச ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும், ஒரே நேரத்தில் இவ்வளவு தொகையானோர் ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது எனவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)