எமது கடல் வளங்களை அழிக்கும் எந்த நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை - அமைச்சர் டக்ளஸ் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எமது கடல் வளங்களை அழிக்கும் எந்த நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை - அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு அரச சார்பற்ற நிறுவனத்தின் மீன்பிடி முகாமைத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் திரு. விவேகானந்தன் இன்று (25.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

இலங்கை கடற்பரப்புகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறி எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையை சுமூகமான முறையில் தடுத்து நிறுத்த பல சந்தர்ப்பங்களில் பேச்சு வார்த்தைகளை நடத்திய போதெல்லாம் தமிழ்நாட்டு மீனவர்கள் கால அவகாசம் கேட்டே காலத்தை கடத்தியிருக்கின்றார்கள்.

இவ்வாறு சுமார் 15 வருடங்கள் கடத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் தொடர்ந்தும் அத்துமீறல்களும், வள அழிப்பும் தொடர்வதால் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த விவேகானந்தன் அவர்கள், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது தவறு என்பதை துணிந்து சொல்லும் தைரியம் தமிழ் நாட்டில் எவருக்கும் இல்லை. இவ்விவகாரத்தில் நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு தாமும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் என்று தெரிவித்ததுடன், எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைக்கும் கச்சதீவு விவகாரத்திற்கும் தொடர்பில்லை. சில தரப்புகள் அரசியலுக்காக இவ்விரு விடயங்களையும் தொடர்புபடுத்தி பேசுகின்றனர்.

எனவே, அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக இருதரப்பிலும் கலந்துரையாடி நியாயமான தீர்வுக்கு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இருதரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமது முன்னெடுப்புகளின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது கடல் வளங்களை அழிக்கும் எந்த நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை - அமைச்சர் டக்ளஸ் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)